டெல்லியில் பாஜக தேசிய செயலாளர் வாணி திரிபாதி மீது தாக்குதல்
டெல்லி: டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் வாணி திரிபாதி அடையாளம் தெரியாத சிலரால் நேற்று இரவு தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடிபோதையில் இருந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் வாணி திரிபாதியை தாக்கியுள்ளனர். காவல்துறைக்கு தகவல் கிடைத்து வந்து பார்ப்பதற்குள், தாக்கியவர்கள் தப்பிச் சென்றனர். பிறகு வாணி திரிபாதியை காவலர்கள் பத்திரமாக அனுப்பி வைத்தனர். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தப்பியோடிய கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வாணி திரிபாதி, நான் காரில் பயணம் செய்து கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் என்னுடைய கார் மீது மோதியது. அந்த காரில் இருந்த ஆசாமிகள் என்னுடைய காருக்கு வந்து எனது டிரைவரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்தார்கள் என்றார்.
அவர்கள் குடிபோதையில் இருந்ததால் நான் காரின் கதவை பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தேன். போலீசுக்கு தகவல் கொடுத்தேன். அவர்கள் வருவதற்குள் அந்த ஆசாமிகள் ஓடிவிட்டார்கள். என் டிரைவர் இல்லாவிட்டால் எனக்கு என்ன ஏற்பட்டிருக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று அச்சத்துடன் தெரிவித்தார்.
தனது காரை வழிமறித்து தாக்கியபோது நூற்றுக்கணக்கான கார்கள் கடந்து சென்றன. ஒருவர்கூட நிறுத்தி உதவமுன்வரவில்லை என்றும் வாணி திரிபாதி ஆதங்கத்துடன் தெரிவித்தார்.