கூடங்குளம் பிரச்சனையை ‘மெஜாரிட்டி’ அரசு சுமூகமாக தீர்க்க வேண்டும்: கருணாநிதி

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"கூடங்குளம் அணுஉலையில் சோதனை ஓட்டம் வெற்றி" என்ற தலைப்பில் 2-4-2013 அன்று வெளி வந்துள்ள செய்தியில் கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்திக்கு முந்தைய சோதனையோட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது என்றும், இச்சோதனையின்போது சுற்றுச்சூழலுக்கோ, பொது மக்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்தும் வாயுக்கள் ஏதும் வெளியேறவில்லை என்றும் அணுமின் நிலைய வளாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.
இந்தச் செய்தி வெளிவந்துள்ள அதே நேரத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் நடந்து வரும் சோதனை நடவடிக்கை மற்றும் நிர்வாகத்தைக் கண்டித்து செட்டிகுளத்தில் உள்ள அணுமின் நிலைய ஊழியர்களின் குடியிருப்பை 3-4-2013 புதன்கிழமையன்று கடல் வழியாகச் சென்று முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாகப் போராட்டக் குழுவினர் அறிவித்து, அதனை நடத்தியிருக்கிறார்கள். மேலும் அங்கே உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெறுகிறது.
"கூடங்குளத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. கூடங்குளத்தில் போராட்டம் இந்த அளவிற்கு பெரிதாக ஆவதற்கு அ.தி.மு.க. ஆட்சியினர்தான் காரணம் என்று எதிர்ப்பாளர்களே கூறுகிறார்கள். தொடக்கத்திலேயே அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு மாநில அரசு ஆதரவு தெரிவித்து விட்டு, தற்போது அவர்களை அலட்சியப்படுத்த கருதுகிறது.
மத்திய அரசின் முடிவினை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு 21-9-2011 அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அணு உலை எதிர்ப்பாளர்களையெல்லாம் சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு, அதற்கு மறுநாள் 22-9-2011 அன்று அவசர அவசரமாக அமைச்சரவையைக் கூட்டி, அதிலே மத்திய அரசு உடனடியாக கூடங்குளம் திட்டப் பணிகளை நிறுத்த வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றியதோடு, மூத்த அமைச்சர் ஒருவர் தலைமையில் போராட்டக் குழுவினரோடு பிரதமரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்து கொடுத்தார்.
இப்படி யெல்லாம் கூடங்குளம் மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, பின்னர் என்ன காரணத்தாலோ தன்னுடைய முந்தைய நிலையை மாற்றிக் கொண்டார்.
எனவே தற்போது நிலைமை போராட்டக்காரர்களைத் தாண்டி பொதுமக்கள் கைக்குச் சென்று விட்ட நிலையில், பிரச்னையை அமைதியாகத் தீர்ப்பதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டுமே தவிர, அதிகாரம் இருக்கிறது என்ற நினைவோடு செயல்பட்டாலோ, கருத்து தெரிவித்தாலோ அது பிரச்சினையைத் தீர்க்க உதவாது.
மத்திய அரசும், மாநில அரசும் போராட்டக் குழுவினரின் முக்கிய பிரதிநிதிகளையெல்லாம் அழைத்து வைத்துப் பேச வேண்டும். ஆபத்து எதுவும் ஏற்படாமல் அரசினால் எடுக்கப்பட வேண்டிய அத்தனை நடவடிக்கைகளையும் செய்து கொடுப்போம் என்று அவர்களுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
பல ஆண்டு காலமாக பணிகளை செய்து முடித்துள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் உகந்த முறையில் சுமூகமாக இதைத் தீர்ப்பதற்கு வழி காண வேண்டுமே தவிர, இந்த "மெஜாரிட்டி" அரசு தங்களிடம் காவல் துறை இருக்கிறது என்ற நினைப்போடு, போராட்டத்தை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று கருதிடக் கூடாது" என்று நான் அந்த அறிக்கையிலே தெரிவித்ததைத் தான் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
ஆட்சிப் பொறுப்பிலே இருப்போர் போராட்டக்காரர்களையும், பொதுமக்களையும் அடக்கி ஒடுக்க எண்ணாமல், இந்த முக்கியமான நேரத்தில் அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து வைத்து பேச்சு வார்த்தை நடத்தி அமைதியான சூழ்நிலை அங்கே உருவாக முயற்சிக்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications