பிர்லா குழும நிறுவனங்கள் ரூ.3900 கோடி வரி செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!
மும்பை: பிர்லா குழும நிறுவனங்கள் ரூ3900 கோடி வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை அதிரடியாக நோட்டீஸ் அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவின் ஆதித்யா பிர்லா தொலைத்தொடர்பு நிறுவனம் கடந்த 2009ஆம் ஆண்டில் ஐடியா செல்லுலர் நிறுவனத்துடன் இணைந்தது. இந்த இரண்டு நிறுவனங்களின் தொலைத்தொடர்பு உரிமங்கள், பணப்பரிமாற்றம் போன்ற அனைத்து பொறுப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டது. இந்நிலையில் இதில் வருமான வரித்துறை அலுவலகம் முறைகேடுகள் நடந்திருப்பதை கண்டுபிடித்துள்ளது.
மேலும் ஆதித்யா நிறுவனம் ரூ 2400 கோடியும், ஐடியா நிறுவனம் ரூ 1500 கோடியும் வரி செலுத்தவேண்டும் என்று குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குறைவான விலையில் பங்குகள் கைமாற்றப்பட்டாலும், இதனால் மூலதன ஆதாயம் அதிகரித்துள்ளதாக வருமான வரி அலுவலகம் கருதுவதாக அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறையின் இந்த நோட்டீஸானது பிர்லா குழுமங்களுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.