காரைக்கால் மீனவர்கள் 26 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டகாசம்
காரைக்கால்: கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 26 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
பட்டினச்சேரி, காரைக்கால் மேடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 மீனவர்கள், 5 விசைப்படகுகளில் , நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே, அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை, 26 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றுள்ளனர். இலங்கை ராணுவ முகாமிற்குக் கொண்டு செல்லப்பட்ட மீனவர்களிடம், இலங்கை கடற்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மார்ச் 7ம் தேியன்று காரைக்கால் மேடு கிராம மீனவ கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் கோடியக்கரை அருகே மீ்ன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் காயமடைந்த சந்திரகுமார், காசிநாதன், முருகையன் மற்றும் சித்திரவேல் ஆகியோர் கிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஏற்கனவே கடந்த மாதம் 8ம் தேதியன்று காரைக்கால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது காரைக்கால் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை கடற்படை விளக்கம்
இதனிடையே இந்திய கடல் எல்லையைத் தாண்டி, இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததால், மீனவர்களை நேற்று கைது செய்ததாக, இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர், கோசல வர்னகுலசூர்யா, தெரிவித்துள்ளார். மீனவர்களின் 6 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள், அனைவரும் , அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வர்னகுலசூர்யா தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்தில் மட்டும் , இந்திய மீனவர்கள் 53 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 34 பேர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய 19 பேர், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மீண்டும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.