தமிழக 'ஸ்பைடர் மேன்' ஜோதிராஜ் 400 அடி உயரத்தில் இருந்து விழுந்து காயம்
பெங்களூர்: தமிழகத்தின் சிலந்தி மனிதன் என்று அழைக்கப்படும் ஜோதிராஜ் ஜோக் அருவி மலையில் ஏற முயன்றபோது 400 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் சிலந்தி மனிதன் என்று அழைக்கப்படுபவர் ஜோதிராஜ்(25). அவர் உயரமான கட்டிடங்கள், மலைகள் ஆகியவற்றில் எந்தவித பிடிமானமோ, பாதுகாப்பு சாதனமோ இல்லாமல் ஏறி சாதனை படைத்து வருகிறார். சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று மலை மீது ஏறி மக்களை மகிழ்விக்கிறார்.
அவர் கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்காவில் இருக்கும் கோட்டை சுவர்களில் அடிக்கடி ஏறி சுற்றுலாப் பயணிகளை அதிசயிக்க வைப்பார். இந்நிலையில் அவர் ஷிமோகா மாவட்டம் சாகர் தாலுகாவில் உள்ள ஜோக் அருவி அருகே இருக்கும் 900 அடி உயர மலை மீது ஏறி சாதனை படைக்க முடிவு செய்தார். இதையடுத்து நேற்று காலை அவர் ஜோக் அருவி மலைக்கு தனது அண்ணன் பாலகிருஷ்ணாவுடன் வந்தார். அவர் மலை மீது ஏறுவதைப் பார்க்க ஏராளமானோர் அங்கு கூடினர்.
ஜோதிராஜ் எந்த பிடிமானமும் இல்லாமல் ஜோக் அருவி மலையில் விறுவிறுவென ஏறினார். சுமார் 400 அடி ஏறியபோது பிடி நழுவி அங்கிருந்து கீழே விழுந்தார். அவர் கீழே விழுகையில் மலையில் பெயர்ந்திருந்த ஒரு கல் அவரது தலையின் பின்புறத்தில் வந்து பட்டது. இதில் அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. ஆனால் அவரோ தானாகவே எழுந்து மீண்டும் மலை ஏறி 900 அடியை வெற்றிகரமாக அடைந்தார்.
அதன் பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரது தலையில் தையல் போட்டப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பாலகிருஷ்ணா கூறுகையில்,
ஜோதிராஜுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் நலமாக உள்ளார் என்றார்.
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்ரதுர்காவில் உள்ள கோட்டை சுவர் மீது ஏறியபோது ஜோதிராஜ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்குப் பிறகு அவர் மீண்டும் தனது பணியைத் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications