நெருங்கும் தமிழ், தெலுங்கு புத்தாண்டு ... தங்கம் பவுனுக்கு ரூ.408 உயர்ந்தது
அமெரிக்க பொருளாதார சந்தையில் முன்னேற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கம் விலை வீழ்ச்சியடைந்து வந்தது. இதனால் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையில் சரிவு காணப்பட்டு வந்தது.இந்தநிலையில் யுகாதி எனப்படும் தெலுங்கு புத்தாண்டு பண்டிகை வரும் 11-ந்தேதியும், தமிழ் புத்தாண்டு பண்டிகை 14-ந்தேதியும் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக பண்டிகைக் காலங்கள் மற்றும் விசேஷ நாட்களில் பெரும்பாலான மக்கள் தங்கம் வாங்குவதை பெரிதும் விரும்புகிறார்கள். இதன் காரணமாக பண்டிகை காலங்களின்போது தங்கத்தின் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்து வருவது வழக்கமான ஒன்று.இப்போது தெலுங்கு, தமிழ் புத்தாண்டு பண்டிகைகள் நெருங்குவதால் அந்த நாட்களில் தங்கம் வாங்க தற்போதே பலர் திட்டமிட்டுள்ளனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. அதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களாக படிப்படியாக குறைந்து வந்த தங்கத்தின் விலை தற்போது, அதே வேகத்தில் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.
சென்னையில் கடந்த 3-ந்தேதி தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.384 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 864-க்கு விற்பனையானது. 4-ந்தேதி மேலும் ரூ.120 விலை குறைந்து விற்பனையானது.இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பவுன் ரூ.21 ஆயிரத்து 832-க்கு விற்பனையான தங்கம், நேற்று அதிரடியாக ரூ.408 விலை உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 780-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.22 ஆயிரத்து 240-க்கும் விற்பனையானது.தங்கத்தின் விலையை போன்றே வெள்ளி விலையும் உயர தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்றுமுன்தினம் ரூ.547-க்கு விற்பனையான 10 கிராம் வெள்ளி, நேற்று ரூ.9 விலை அதிகரித்து, ரூ.556-க்கு விற்பனை செய்யப்பட்டது.