ராஜபாளையம் அருகே பயங்கரம்... காஸ் சிலிண்டர் பொருத்தப்பட்ட ஆம்னி கார் வெடித்து 5 பேர் பலி
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே காஸ் சிலிண்டர் பொருத்தப்பட்ட ஆம்னி கார் நிலை தடுமாறி மரத்தில் மோதியதில், காஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துக் கொண்டதில் அதில் பயணித்த 5 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
செங்கோட்டை வம்பளந்தான்முக்கு புலவர் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் லட்சுமணன், கோபால், செண்பகவல்லி மகன் முருகன், நயினார் ம்கன் கல்யாணி, முத்துகுமார் மகன் ராஜூ. இவர்கள் 5 பேரும் இன்று அதிகாலை 2 மணி அளவில் செங்கோட்டையிலிருந்து மாருதி ஆம்னி காரில் பரமககுடிக்கு பெயிண்ட்டிங் செய்ய சென்றுள்ளனர்.

இவர்கள் முத்தூட் நிறுவனத்தில் சுவர் விளம்பர பெயிண்ட்டிங் செய்வதற்காக சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற ஆம்னி கார், காஸ் பொருத்தப்பட்டதாகும்.
கார், ராஜபாளையம் அருகே வந்தபோது, ஒரு பெட்ரோல் பங்க் அருகே திடீரென நிலை தடுமாறி ஓடி, சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. அதில் காஸ் குழாய் உடைந்து காஸ் பரவியதில் தீப்பிடித்துக் கொண்டது.
இதில் காரில் இருந்த ஐந்து பேரும் தீயில் கருகி விட்டனர். தீவிபத்தில் சிக்கிக் கொண்டதும், ஐவரும் தங்களது செல்போன்களை வெளியில் தூக்கி வீசியுள்ளனர். இந்த செல்போன்களை வைத்துத்தான் ஐந்து பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
ஐந்து பேரும் அடையாளம் தெரியாத அளவுக்கு கரிக்கட்டையாகிப் போய் விட்டனர். இந்த சம்பவத்தால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செங்கோட்டையில் ஓரே தெருவை சேர்ந்த உறவினர்கள் 5 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் லட்சுமணன், ராஜூ, கல்யாணி ஆகிய 3 பேருக்கும் திருமணமாகி தலா 2 குழந்தைகள் உள்ளன குறிப்பிடத்தக்கது.
ஆம்னியே எச்சரித்தும்
ஆம்னி கார்களில் காஸ் சிலிண்டர் பொருத்துவது ஆபத்தானது என்று ஆம்னி நிறுவனமே பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனாலும் அதையும் மீறி பலரும் ஆம்னியில் காஸ் சிலிண்டர்களைப் பொருத்தி வண்டி ஓட்டி வருகின்றனர். இப்படிப் பொருத்தப்பட்ட கார்தான் இன்று காலை விபத்துக்குள்ளாகி தற்போது ஐந்து பேரின் உயிரைக் குடித்து விட்டது.












Click it and Unblock the Notifications