ஜெகதீஷ் டைட்லருக்கு எதிரான சீக்கியர் கலவர வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு

1984-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி நடந்த கலவரத்தின்போது, வடக்கு டெல்லி குருத்வாராவில் 3 பேர் கொல்லபப்ட்டனர். இவ்வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சம்பவம் நடந்த அன்று ஜெகதீஷ் டைட்லர் அந்த இடத்தில் இல்லை, இந்திரா காந்தியின் இல்லத்தில் இருந்தார் என்றும், அவருக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை என்றும் சி.பி.ஐ. வழக்கறிஞர் வாதாடினார். இதனையடுத்து இந்த வழக்கை 2009ம் ஆண்டு சி.பி.ஐ. மூடிவிட்டது.
ஆனால், இந்த கொலையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜெகதீஷ் டைட்லருக்கு தொடர்பு இருந்ததாகவும், எனவே இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும் என்று கொல்லப்பட்ட ஒருவரின் மனைவியான லக்விந்தர் கவுர் டெல்லி நீதிமன்றத்தில் அண்மையில் மனுத் தாக்கல் செய்தார். அம் மனுவில், கலவரம் நடந்த போது கலவரக் காட்சிகளை கண்ணால் கண்ட சாட்சிகள் இருவர், கலவரத்திற்குப் பின்னர் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டதாகவும், முக்கிய சாட்சிகளான அவர்கள் இருவரிடமும் வாக்குமூலங்களை பதிவு செய்ய சி.பி.ஐ. தவறிவிட்டதாகவும், அந்த வாக்குமூலத்தையும் பதிவு செய்து ஜெகதீஷ் டைட்லர் மீது மறுவிசாரணை செய்ய சி.பி.ஐ.க்கு மீண்டும் உத்தரவிடவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இம்மனுவை நீதிபதி விசாரணக்கு ஏற்றுக்கொண்டார். கடந்த 4-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போதும், சம்பவம் நடந்தபோது ஜெகதீஷ் டைட்லர் அந்த இடத்தில் என சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். ஆனால் இன்று நடைபெற்ற விசாரணையின்போது, இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை சி.பி.ஐ. முடித்துவிட்டது சரியல்ல, மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனால் ஜெகதீஷ் டைட்லருக்கு மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications