காதலர்கள் உடலுறவு கொள்வது பாலியல் குற்றமாகாது.. வாலிபரை விடுவித்து டெல்லி கோர்ட் தீர்ப்பு
டெல்லி: திருமணத்துக்கு முன் பெண்ணின் விருப்பத்தோடு உறவில் ஈடுபடுவது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று டெல்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த ரகு மற்றும் உஷா, கடந்த 2006ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். அப்போது உஷாவை திருமணம் செய்துகொள்வதாக கூறிய ரகு பலமுறை உறவில் ஈடுபட்டார். ஆனால் இதுவரை உஷாவை, ரகு திருமணம் செய்யாமல் ஏமாற்றியுள்ளார்.
இதுகுறித்து போலீசில் உஷா புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், கடந்த 3ம் தேதி ரகுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் கூடுதல் செசன்ஸ் நீதிபதி வினய்குமார் கன்னா முன் வந்தது.
அப்போது ரகு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பாலக் முகமது மியோ கூறியதாவது:
ரகுவும், உஷாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். டிரைவர் வேலை செய்து வரும் ரகு, உஷாவின் விருப்பத்தினாலேயே உடலுறவு கொண்டுள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்ள காலதாமதம் செய்ததால், உஷா சந்தேகமடைந்து ரகு மீது போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார்தான் ரகு மீது பலாத்கார வழக்கு போட்டுள்ளனர். எனவே ரகுவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என்று கேட்டார்.
இதையடுத்து நீதிபதி, ‘உஷாவை பலாத்காரம் செய்ததாக ரகு மீது சுமத்தப்பட்ட குற்றத்தில், உஷாவின் விருப்பமின்றி அவர் உறவில் ஈடுபட்டதாக தெரியவில்லை. எனவே அதனை பலாத்கார வழக்காக கருத முடியாது. எனவே ரூ.25,000 பிணைத்தொகை செலுத்திய பின் ரகுவை ஜாமீனில் விட அனுமதிக்கிறேன்‘ என்றார். இதையடுத்து கைது செய்யப்பட்ட ரகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications