சித்தேரி வரப்போகுதா? அய்யயோ என்ன நடக்குமோ? பயணிகளை திகிலடைய வைக்கும் தொடர் விபத்துகள்!
சென்னை: சித்தேரி அருகே ரயில் விபத்து என்பது அடிக்கடி ஊடகங்களில் இடம்பெறக் கூடிய விஷயமாகிவிட்டதால் அந்த ரயில் நிலையத்தை கடக்கும் போது மரண பீதியுடன் தான் பயணிக்க வேண்டியிருக்கிறது என்கின்றனர் பயணிகள்.
சென்னையிலிருந்து சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் அரக்கோணம் ரயில் மார்க்கம் வழியாகத்தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோயம்புத்தூர், பெங்களூர், திருவனந்தபுரத்துக்கு ரயில்கள் செல்கின்றன. இந்த பாதையில் சித்தேரி அருகேதான் அடுத்தடுத்த விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

10 பேரை பலிகொண்ட விபத்து
2011-ம் ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 9.45 மணியளவில் அரக்கோணம் ரயில் நிலையத்தை அடுத்த சித்தேரி அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த காட்பாடி பாசஞ்சர் ரயில் மீது பின்னால் வந்த மேல்மருவத்தூர்-வேலூர் விரைவு பாசஞ்சர் ரயில் மோதியது. இதில் 10 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மீண்டும் சித்தேரியிலேயே விபத்து
தற்போதும் அதே சித்தேரி அருகே இன்று காலை பெங்களூர் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 4 பேர் பலியாகியுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர்.

சித்தேரின்னாவே அச்சம்
இந்த பெரும் சம்பவங்கள் மட்டுமின்றி சித்தேரி அருகே தொடர்ந்து அடிக்கடி சிறு சிறு ரயில் விபத்துகள் நடைபெற்று வருவதாகவும் பயணிகள் கூறுகின்றனர். தொடர்ச்சியாக சித்தேரி அருகே விபத்துகள் நடைபெற்று வரும் நிலையில் ரயில்வே நிர்வாகம் அலட்சியமாக இருந்து வருவதாகவும் பயணிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் ஒவ்வொருமுறையும் சித்தேரியை கடக்கும் போதும் ஒரு வித உயிர் பயத்துடனேயே பயணிக்க வேண்டியிருக்கிறது என்கின்றனர்.












Click it and Unblock the Notifications