தேமுதிகவை முதலில் பேச அனுமதிக்க வேண்டும்: காங்., கம்யூ, புதிய தமிழகம் சட்டசபையில் வலியுறுத்தல்
சென்னை: எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ள தேமுதிக தான் மரபுப் படி மானியக்கோரிக்கையை துவக்கி வைக்கவேண்டும் என்று சட்டப்பேரவை சபாநாயகரிடம் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏக்களும் வலியுறுத்தினர்.
சட்டப்பேரவையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் பேசும் வரிசை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார் இந்த நிலையில் விஜயகாந்த் கருத்துக்கு ஆதரவாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி எம்.எல் ஏக்கள் பலரும் பேசினர்.
மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ சவுந்தர்ராஜன் பேசும் போது, சட்டசபையில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ள தே.மு.தி.க. தான் மானிய கோரிக்கை மீதான விவாதத்தை தொடங்கி வைக்கும் மரபு உள்ளது. அந்த வகையில் தே.மு.தி.க எம்.எல்.ஏக்களை நாளைக்காவது மானிய கோரிக்கையின் மீது முதலாவதாக பேச அனுமதிக்குமாறு வேண்டுகோளாக வைக்கிறேன் என்றார்.
இதே கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ ஆறுமுகமும் வலியுறுத்தினார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவரும் எம்.எல்.ஏவுமான டாக்டர் கிருஷ்ணசாமி, கடந்த சில நாட்களாக சட்டசபையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 40 நிமிடங்கள் பேசிய பிறகும்கூட இறுதியாக வெளிநடப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் மானிய கோரிக்கையில் எதிர்க்கட்சிதான் முதலில் பேச வேண்டும் என்றார்.
இதுவரை இருந்த மரபுபடி எதிர்க்கட்சியான தே.மு.தி.கவை தொடர்ந்து முதலில் பேச அனுமதிக்க வேண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி கூறினார்.
சட்டமன்ற நாடாளுமன்ற மரபுபடி எதிர்க்கட்சியான தே.மு.தி.க.வுக்கு முதலில் பேச வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றார் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா.
பேசிதான் முடிவெடுத்தோம்
இதையடுத்துப் பேசிய சபாநாயகர் தனபால், சட்டப் பேரவை விதி 98-ன் கீழ் பேரவை தலைவர் யார்- யாரை வரிசையாக பேச அழைக்கலாம் என்ற உரிமை உள்ளது. தே.மு.தி.க. இங்கு நடந்து கொள்ளும் விதங்களை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எவ்வளவு நேரம் பேச அனுமதித்தாலும் வெளிநடப்பு செய்து, வெளியில் கொச்சைபடுத்தி பேசுகிறார்கள். நான் இந்த முடிவை அறிவிப்பதற்கு முன்பு யார்- யாரை முதலில் பேச அனுமதிக்க வேண்டும் என்பதை எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசிதான் முடிவு செய்திருக்கிறேன் என்றார்.
சட்டமன்றக் கூட்டத்தைப் புறக்கணித்த தேமுதிக, திமுக:
இந் நிலையில் இன்று சட்டமன்றக் கூட்டத்தைப் திமுக, தேமுதிக எம்எல்ஏக்கள் புறக்கணித்துவிட்டனர்.
நேற்று முன்தினம் அமளியில் ஈடுபட்ட தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்களும் அவையில் இருந்து 2 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர். அந்த இரண்டு நாள் இடைநீக்கம் முடிந்த பின்பும் திமுக உறுப்பினர்கள் இன்று அவைக்கு வரவில்லை.
அதே போல நேற்று சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தேமுதிக உறுப்பினர்களும் இன்று அவைக்கு வரவில்லை.












Click it and Unblock the Notifications