எதிர்க்கட்சி அந்தஸ்து மாற்றத்திற்குக் கண்டனம் - இன்று தேமுதிக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு போக மாட்டார்கள்
சென்னை: எதிர்க்கட்சி அந்தஸ்தை சபாநாயகர் மாற்றியதற்குக் கண்டனம் தெரிவித்து தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சட்டசபைக்குப் போக மாட்டார்கள் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
சட்டமன்றத்தில் மானிய கோரிக்கைகள் துறை வாரியாக ஒவ்வொரு நாளும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அத்தகைய மானிய கோரிக்கையை சம்பந்தப்பட்ட துறையை சார்ந்த அமைச்சர் முன் மொழிவார். அதற்கு பிறகு வெட்டுத் தீர்மானங்களை முன் மொழிந்து பிரதான எதிர்க்கட்சி பேசுவது இதுகாறும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறையாகும். பிரதான எதிர்க்கட்சி பேசிய பிறகு எதிர் வரிசையை சார்ந்த இதர கட்சிகள் பேச அழைக்கப்படுவது வாடிக்கை.
இன்றைய தினம் சட்டமன்ற பேரவை தலைவர் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது சில குறைகளை சுட்டிக்காட்டியுள்ளார். அதிகாரங்களை பயன்படுத்தி சட்டமன்ற பேரவை தலைவர் தேமுதிக உறுப்பினர்களின் பேச்சை முறைப்படுத்தி இருக்கலாம். அதற்கு மாறாக எதிர்க்கட்சிக்கு என்று தரப்பட்ட அந்தஸ்தையே மாற்றுவது முறையல்ல என்று கருதுகிறேன்.
முக்கிய எதிர்க்கட்சிக்கு உரிய வரிசை முறையை மாற்றி அமைத்தது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்பதால் பேரவை தலைவர் இன்று வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்த முறை மாற்றத்தை ஜனநாயக உணர்வோடு எதிர்க்க வேண்டும் என்கின்ற காரணத்தினாலும், 10-4-2013 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தில் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications