5.30 மணிக்கு கிளம்ப வேண்டிய ஃபிளைட் 11 மணியாகியும் ஏன் கிளம்பல? பயணிகள் போராட்டம்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 5.30 மணிக்கு குவைத் கிளம்ப வேண்டிய விமானம் எந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டாதல் பயணிகள் ஆவேசம் அடைந்து போராட்டத்தில் குதித்தனர்.
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 5.30 மணிக்கு குவைத் கிளம்பும் விமானத்தில் 224 பயணிகள் ஏறினர். அவர்களும் விமானம் இதோ புறப்படும் அதோ புறப்படும் என்று நினைத்து காத்திருந்தும் 7 மணி ஆகியும் விமானம் கிளம்பியபாடில்லை. இது குறித்து பயணிகள் பணிப்பெண்ணிடம் கேட்டதற்கு எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதை தொழில்நுட்ப வல்லுனர்கள் சரிசெய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் நேரம் ஓடி 11 மணி ஆகியது. விமானம் புறப்படாமல் இருந்ததால் பயணிகள் ஆத்திரமடைந்தனர். காலை 5.30 மணிக்கு விமானம் கிளம்பும் என்பதால் அதிகாலை 3 மணிக்கே நாங்கள் விமான நிலையத்திற்கு வந்துவிட்டோம். அப்பொழுதில் இருந்து எதுவும் சாப்பிடாமல் பசியுடன் இருக்கிறோம் என்று பயணிகள் கோஷமிட்டனர். தங்களை விமானத்தில் இருந்து இறக்கிவிடுமாறு கூறி கதவைத் தட்டினர்.
இது குறித்து தகவல் அறிந்த விமான நிறுவன அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் வந்து பயணிகளை சமாதானம் செய்தனர். விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் விமானம் ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டு கோளாறு சரிசெய்ய்யப்பட்ட பிறகு இரவு விமானம் குவைத் கிளம்பும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications