ப்ளீஸ்...குடிக்காதீங்க....: குடிமகன்கள் காலில் விழுந்து சசிபெருமாள் நூதன பிரசாரம்
கோவை: குடி மகன்களின் காலில் விழுந்து, குடிக்காதீர்கள் குடும்பம் வீணாய் போய்விடும் என கெஞ்சி சசிபெருமாள் நூதன பிரசாரம் செய்தார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காந்தியவாதி சசிபெருமாள் பல்வேறு மாவட்டங்களில் தொடர் பிரசாரம் செய்து வருகிறார்.
கோவை மாவட்டத்தில் கடந்த 6ம் தேதி முதல் நடைபயணமாக சென்று, ஒவ்வொரு பகுதியிலும் பிரசாரம் செய்து வருகிறார்.கோவையில் நேற்று வெரைட்டிஹால் ரோடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. கடை முன்பு தனது ஆதரவாளர்களுடன், கையில் தேசிய கொடியை பிடித்தபடி நின்றுகொண்டிருந்தார்.
முண்டியடித்து மது பாட்டில்களை வாங்கிவிட்டு வெளியே வந்த ‘குடி‘மகன்கள் கையை பிடித்து, மது குடிக்காதீர்கள், உங்களுக்கும், உங்களது குடும்பத்துக்கும் கேடு விளைவிக்கும் என்றார். சிலர் இவர் சொல்வதை காதில் வாங்கவில்லை.
இதையடுத்து, அவர்களது காலில் விழுந்து கெஞ்சினார். இவரது வேண்டுகோளை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மனம் உருகினர். மது வாங்கிவிட்டு வந்த பலர், அருகில் உள்ள பாருக்கு சென்று குடிக்காமல் நடையை கட்டிவிட்டனர். ஒருசிலர் பக்கத்தில் உள்ளவர்களிடம் பாட்டில்களை கொடுத்துவிட்டு சென்றனர். சிலர், இவரது கருத்தை கேட்காமல் தொடர்ந்து பார் இருந்த திசையை நோக்கி நடையை கட்டினர்.
சுமார் 2 மணி நேரம் அங்கேயே நின்று பிரசாரம் செய்தார். இவரை பார்த்துவிட்டு நிறைய குடிமகன்கள் மது வாங்க கடைக்கு வரவேயில்லை. இதன்பின்னர், அந்த இடத்தை காலி செய்துவிட்டு காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடைக்கு சென்றார்.
அங்கும், ஒரு மணி நேரம் நின்றுகொண்டு காலில் விழுந்து கெஞ்சினார். அந்த கடையிலும் கூட்டம் கலைந்தது.இது பற்றி சசிபெருமாள் கூறுகையில், ஒரு மனிதன் திருந்த வேண்டும், ஒரு குடும்பம் பிழைக்க வேண்டும் என்பதற்காக காலில் விழுகிறேன். இதனால் எனது மரியாதைக்கு இழுக்கு வந்துவிடாது. 40 பேரிடம் கூறினால், 4 பேராவது கேட்பார்கள். பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை பிரசாரம் செய்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications