இந்திராவுக்குப் பிறகு பிரதமராக ஆசைப்பட்ட சஞ்சய்காந்தி: விக்கிலீக்ஸ் தகவல்கள்
டெல்லி: இந்திரா காந்திக்குப் பிறகு நாட்டின் உயரிய பதவியான பிரதமர் பதவியை அடைய அவரது மகன் சஞ்சய்காந்தி எப்படியெல்லாம் விரும்பினார் என விவரிக்கும் அமெரிக்க தூதரக ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது.
இது தொடர்பாக 1976 ஆம் ஆண்டு ஜனவரி மாத அமெரிக்க தூதரக ஆவணத்தில் இடம் பெற்றுள்ள தகவல்கள்:
சஞ்சய்காந்தி கொல்லைப்புறமாக அரசியல் செய்வதைக் கைவிட்டு நேரடி அரசியலுக்கு வரமுடிவு செய்ததார். இதற்கு முன்னோட்டமாக சண்டிகரில் டிசம்பர் 23-ஜனவரி 1 வரை நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் தம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டார். இம்மாநாட்டில் அவர் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தார். இந்திரா காந்தியின் 20 அம்ச திட்டத்தை விளக்கக் கூடிய துண்டறிக்கைகளை உயரப் பறக்கும் பலூன்களில் பறந்து கிராமங்களில் கொடுத்தார்.

இந்திரா காந்தியின் 30வயது மகனான சஞ்சய்காந்தி முதல் முறையாக சண்டிகர் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டு மேடையில் பேச்சாளர்களுக்கு பின்புறம் அமைச்சர்கள் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் அமர்ந்திருந்தார். மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் அவரிடன் நின்றபடி அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தனர். காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களும் அரசியல்வாதிகளும் சஞ்சய்காந்தியை சுற்றிலும் நின்று கொண்டிருந்தனர். அம்மாநாட்டில் இந்திரா காந்தி வாழ்க! சஞ்சய் காந்தி வாழ்க!என்று காங்கிரஸ் தொண்டர்கள் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர்.
சண்டிகரில் காங்கிரஸ் கட்சியின் துணைக் குழுக்கள் பலவற்றிலும் சஞ்சய் காந்தி உரையாற்றினார். மாணவர் காங்கிரஸ் அமைப்பிலும் அவர் உரையாற்றினார். நூற்றுக்கணக்கான எம்.பி.க்கள், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இளைஞர் காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் சஞ்சய் காந்தி ஆற்றிய உரையை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த மாநாடு முடிந்த நிலையில் சஞ்சய்காந்தி உடனடியாக நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார். நாடு முழுவதும் இளைஞர் காங்கிரசாருடன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ளவே இந்த சுற்றுப் பயணம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார். ஆந்திரா மற்றும் மும்பையில் பேரணிகளில் கலந்து கொண்டார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சராக இருந்த ரகு ராமையா, இந்திய அரசியலில் ஒரு சூரியன் உதயமாகிக் கொண்டிருப்பதாக சஞ்சய்காந்தியை வைத்துக் கொண்டு பேசினார். மும்பையில் பாதுகாப்பு அமைச்சர் பன்சிலால், தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் வி.சி.சுக்லா ஆகியோருடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மும்பையில் இளைஞர் காங்கிரசார்- தொழிற்சங்கத்தினர் இணைந்து நடத்திய பேரணியில் கலந்து கொண்டார். மும்பையில் உள்ளூர் அரசியல்பார்வையாளர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார்.
மும்பையில் நடைபெற்ற தொழிலாளர் பேரணியில் இலங்கை பிரதமரின் மகனான அனுரா பண்டாரநாயக்கேவும் கலந்து கொண்டார். சஞ்சய் காந்தியும் அனுரா பண்டாரநாயக்கவும் ஒரே நேரத்தில் அரசியலில் நுழைந்தவர்கள்.
சஞ்சய் காந்தியின் கடந்த 3 வார கால செயல்பாடுகள் அனைத்தும் பொதுமக்கள் மத்தியில் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலேயே இருந்தது. அண்மையில் அனைத்து வட்டார அளவிலும் இளைஞர் காங்கிரஸ் அமைப்புகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அவரைப் பொறுத்தவரையில் இந்திரா காந்திக்குப் பிறகு பிரதமராகவே விரும்பினார் என்கிறது அந்த ஆவணம்.












Click it and Unblock the Notifications