மூவரின் உயிரைக் காக்க முதல்வருக்கு மதிமுக கோரிக்கை
சென்னை: தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்து மூன்று தமிழர்களின் உயிர்களை காக்கவேண்டும் என்று தமிழக முதல்வருக்கு மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில், நடைபெற்ற இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
உச்ச நீதிமன்றம் தேவேந்திரபால் சிங் புல்லர் மரண தண்டனையை உறுதிபடுத்தி தந்த தீர்ப்பு மனித உரிமை ஆர்வலர்களைப் பேரிடியாகத் தாக்கி உள்ளது. திருப்பெரும்புதூர் கொலை சம்பவத்தில் துளி அளவும் தொடர்பு இல்லாத நிரபராதிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரையும் காவல்துறை துன்புறுத்திப் பெற்ற நீதிக்குப் புறம்பான ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு தடா நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் இந்திய அரசியல் சட்டம் 72-ஆவது பிரிவின்படி இந்தியக் குடியரசுத் தலைவருக்கும், இந்திய அரசியல் சட்டம் 161-ஆவது பிரிவின்படி மாநில ஆளுநருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் 72-ஆவது பிரிவின்படி குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரம், 161-ஆவது பிரிவின்படி மாநில ஆளுநரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தாது என்று அரசியல் சட்டத்தில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் ஏற்கனவே சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் கருத்தில் கொண்டு மாண்புமிகு முதல்வர் தமிழக அமைச்சரவையைக் கூட்டி அதில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதற்கு முடிவெடுத்து மாநில ஆளுநர் மூலம் இந்த மனிதநேய முடிவைச் செயல்படுத்தி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் உயிர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
சென்னையில் பொதுக்கூட்டம்
பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவர் உயிரைக் காப்பாற்ற ஏப்ரல் 30-ஆம் தேதி தலைநகர் சென்னையில் மூன்று தமிழர் உயிர்காக்கும் இயக்கத்தின் சார்பில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது எனவும், அதற்கான ஆக்கப் பணிகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் செய்வதென்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.