தமிழக அமைச்சர் கார் மோதி இளைஞர் பலி? போலீசார் மாற்றி வழக்குப் பதிவு?
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தமிழக அமைச்சர் செல்லப்பாண்டியனின் வாகனம் மோதி இளைஞர் ஒருவர் பலியானதாகவும் ஆனால் அமைச்சருடன் வந்த வாகனம் மோதி ஒருவர் பலியானதாக போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் சென்று கொண்டிருந்தார். அப்போது நெல்லை- தூத்துக்குடி நெடுஞ்சாலையில் வாகைக்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ராமர் என்பவர் மீது அமைச்சரின் வாகனம் மோதியதாகவும் அதில் அவர் 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அமைச்சரின் வாகனமோ அவருடன் சென்ற வாகனங்களோ நிற்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் 108 அவசர உதவியுடன் ராமரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் ராமரின் உயிர் பிரிந்தது.
ஆனால் போலீசாரோ அமைச்சருடன் சென்ற ஆழ்வார்திருநகரி ஒன்றியப் பெருந்தலைவர் விஜயகுமாருடைய ஸ்கார்பியோ வாகனத்தின் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறுகின்றனர். அமைச்சரின் வாகனங்களுடன் வந்த விஜயகுமார் வாகனம் டீசல் போடுவதற்காக அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஒதுங்கியதாகவும் அப்போது அமைச்சரின் வாகனத்தை பிக்கப் செய்வதற்காக சேர்மேனின் வாகனம் அதிவிரைவாக சென்றதால் சாலையை கடக்க முயன்ற ராமர் மீது வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் வழக்குப் பதிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications