ஜெகன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார்- ரோஜா சவால்
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையாக தாக்கிப் பேசியுள்ள ராம் நாராயண் ரெட்டி, அவரை தூக்கில் போட வேண்டும் என்றார்.
இதற்கு ஜெகன் கட்சியைச் சேர்ந்த நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்ததோடு, ஜெகன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலைவிட்டே விலகத் தயார் என்று சவால் விடுத்துள்ளார்.
சித்தூர் மாவட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் ரோஜா பேசுகையில், "ராஜசேகரரெட்டி தயவால் எம்.எல்.ஏ ஆக வெற்றி பெற்று அமைச்சர் பதவியை அனுபவித்து வரும் ராம நாராயண் ரெட்டி பதவி ஆசையில் இப்போது ராஜசேகர ரெட்டி குடும்பத்தை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும், ஜெகன்மோகன் ரெட்டியை தூக்கிலிட வேண்டும் என்று கூறி வருகிறார்.
ஒரு குடும்பத்தை ஒதுக்கி வைக்கவேண்டும் என்று கூறுவது பெரிய குற்றம் என்பதுகூட தெரியாமல் அவர் பேசுவது அவரின் கீழ்த்தரமான செயலை காட்டுகிறது. இதனை அவர் பொதுமக்கள் மத்தியில் பேசினால் அவரை மக்கள் கல்லால் அடித்து விரட்டுவார்கள்.
ஜெகன் மோகன் ரெட்டியை மீண்டும் காங்கிரசில் சேரும் வகையில் பணிய வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசியலில் இருந்தே விரட்டவேண்டும் என்ற நோக்கத்தில் அவரை தொடர்ந்து சிறையில் அடைத்துள்ளனர். அமைச்சர் நாராயண்ரெட்டிக்கு தைரியம் இருந்தால் பதவியை ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க தயாரா?
எப்போது தேர்தல் நடந்தாலும் அவரை தோற்கடிக்க மக்கள் தயாராக உள்ளனர். ஜெகன் மோகன் மீதான குற்றத்தை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயாராக உள்ளேன். காங்கிரஸ் மந்திரிகள் இதற்கு தயாரா?," என்று கேட்டுள்ளார்.