மன்மோகன் சிங் அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன!- வைகோ

ம.தி.மு.க பிரமுகர் திருமண நிகழ்ச்சியில் பங்ககேற்பதற்காக திண்டுக்கல்லுக்கு வைகோ வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், "இலங்கை தமிழர்களுக்கு அரசியல் நீதி கேட்டு மாணவர்கள் நடத்திய போராட்டம் தனிச் சிறப்பு வாய்ந்தது. உலக நாடுகளின் பிடியிலிருந்து இலங்கை இனியும் தப்பிக்க முடியாது.
இதன்மூலம் சுதந்திர தனிஈழம் விரைவில் நனவாகும் வாய்ப்புள்ளது. விடுதலைப் புலிகளுக்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் வைகோ மட்டுமே குரல் கொடுக்கிறார் என்ற நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதனை மாணவ சமுதாயம் மாற்றியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
பொதுவாக்கெடுப்பு நடத்தி சுதந்திர ஈழம் அமைவதற்கு சட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மார்ச் மாதம் 24-ம் தேதி கோரிக்கை விடுத்தேன். அந்த தீர்மானம் 27-ந்தேதி சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதே போல நாடாளுமன்றத்திலும் இத்தீர்மானம் நிறைவேறும் நாள் விரைவில் வரும். ஆனால் தற்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு அதைச் செய்யாது. இந்த அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. விரைவில் புதிய அரசு அமையும். அப்போது இந்த தீர்மானம் நிறைவேறியே தீரும்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், முல்லை பெரியாறு, மது ஒழிப்பு போராட்டங்களில் ம.தி.மு.க தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் மக்களிடையே அதிக நம்பிக்கை பெற்றுள்ளது. இதன்மூலம் கடந்த 2 வருடங்களில் மக்கள் ஆதரவு பெருகி உள்ளது," என்றார்.












Click it and Unblock the Notifications