மேலிடம் சொன்னால் திமுக கூட்டங்களில் கலந்து கொள்வேன்: மு.க.அழகிரி
மதுரை ரிசர்வ் லைன் தபால் நிலையம் அருகில் ரயில்வே முன்பதிவு மையத்தை அழகிரி இன்று காலை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
மதுரை முழுவதும் 15 இலவச நவீன கழிப்பறைகளை கட்டிக் கொடுத்தேன். அதனை அனைத்தையும் கட்டண கழிப்பறையாக மாற்றி மதுரை மாநகராட்சியும், தமிழக அரசும் காசு பார்க்கிறது.
தென் மாவட்ட மக்களின் வசதிக்காக மதுரையில் அண்ணா பல்கலைக்கழக தொடங்கப்பட்டது. ஆனால், நான் கொண்டு வந்த அண்ணா பல்கலைக்கழக கிளையை தற்போது சென்னைக்கு மாற்றி விட்டார்கள்.
கேள்வி: திமுக கூட்டங்களில் நீங்கள் சமீபகாலமாக கலந்து கொள்ளாதது ஏன்?
அழகிரி: என்னை கலந்து கொள்ள மேலிடம் உத்தரவிட்டால் கலந்து கொள்வேன்.
கேள்வி: கனிமொழி உங்களை சந்தித்ததில் எதுவும் முக்கியத்துவம் உண்டா?
அழகிரி: அண்ணனை தங்கச்சி சந்திக்கக் கூடாதா?. அதைக் கூட திரித்து எழுதுகிறீர்களே. அண்ணனை பார்க்க தங்கச்சி வருவது என்ன தவறு? என்றார்.
மதுரை மாநகராட்சியில் ஊழல் குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு, மதுரை மாநகராட்சியில் மட்டுமா ஊழல் நடக்கிறது. தமிழ்நாட்டிலும் ஊழல் நடந்துகொண்டிருக்கிறது. இதை தட்டிக் கேட்க எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் எழுந்து பேச முயன்றால் அனுமதிப்பதில்லை. அதேபோலதான் மதுரை மாநகராட்சியிலும் எதிர்க்கட்சிகள் ஊழலைப் பற்றி பேச அனுமதிப்பதில்லை என்றார்.