ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: சிபிஐ சாட்சியாக தயாளு அம்மாள் மே 6-ல் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்?

டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அண்மையில் சிபிஐ தரப்பு அரசு சாட்சியாக அட்டர்னி ஜெனரல் வாகனவதி உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர். மேலும் விசாரிக்க வேண்டிய சிபிஐ தரப்பு சாட்சிகளின் பட்டியலை நீதிபதி ஓ.பி. சைனியிடம் சிபிஐ நேற்று முன் தினம் அளித்தது. அதில் கருணாநிதியின் மனைவி தயாளுவின் பெயர் இடம்பெற்றுள்ளது. தயாளு அம்மாள் மே 6-ந் தேதி சாட்சியமளிப்பார் என்றும் அதில் கூறப்பட்டிருப்பதாக தெரிகிறது.
ஆனால் தயாளு அம்மாள் சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறப்படுவதால் சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பினாலும் அவர் ஆஜராவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதே நேரத்தில் சிபிஐ சம்மன் அனுப்பினால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க விலக்குக் கோரி திமுக தரப்பில் மனுத்தாக்கல் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி-தயாளுவின் மகனும், திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலினின் மணி விழா சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் கடந்த மார்ச் 1-ந்தேதி நடைபெற்றது. நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கும், கருணாநிதியின் வீட்டுக்கும் சில கிலோ மீட்டர் தூரமே இருந்த போதும் தயாளு அம்மாள் அதில் கலந்து கொள்ளவில்லை. இந்த காரணத்தை சுட்டிக் காட்டி சென்னையிலிருந்து டெல்லிக்கு அவரால் வர இயலாது என்று கூறி விலக்கு கோருவோம் என்பது திமுகவினரின் கருத்தாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications