ஜாமீனில் வந்தபோது சிறை வாசலிலேயே மயக்கம்: மருத்துவமனையில் திவாகரன்

சசிகலா தம்பி திவாகரன் மற்றும் ரிஷியூர் ஊராட்சிமன்றத் தலைவர் கிருஷ்ணமேனன், அதே ஊரைச் சேர்ந்த ராசேந்திரன் ஆகியோர் திமுக முன்னால் ஊராட்சி தலைவர் தமிழார்வனை கொலை செய்யும் நோக்கத்தோடு மிரட்டியதாக தமிழார்வன் கொடுத்த புகாரின் பேரில் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்து மன்னார்குடி டி.எஸ்.பி. தலைமையிலான போலிசார் மூவரையும் கைது செய்தனர்.
இவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீடாமங்கலம் ஜே.எம். உத்தரவிட்டார். அதன்படி திருச்சி சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அவர்கள் ஜாமீன் கோரி நீடாமங்கலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மூவரது மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் திவாகரன் திருவாரூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி நாராணயசாமி, திவாகரன் மன்னார்குடி டி.எஸ்.பி அலுவலகத்தில் ஆஜராகி தினமும் கையெழுத்துப் போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.
இந்த ஜாமீன் உத்தரவு திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை 5.30 மணிக்கு திருச்சி மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் திவாகரன்.
அப்போது சிறை வாசலிலேயே அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதால் மன அழுத்தம் அதிகமாகியுள்ளது. எனவே தான் அவர் மயக்கம் அடைந்தார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications