அனாமதேய தந்தியால் ஒத்தி வைக்கப்பட்டது சுதாகரன் மீதான போதைப் பொருள் பதுக்கல் வழக்கு தீர்ப்பு!
கடந்த 2001ம் ஆண்டு ஹெராயின் போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்ததாக வி.என். சுதாகரன் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் சென்னை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுவதாக இருந்தது. இதனால் வி.என். சுதாகரன் உள்ளிட்டோர் இன்று நீதிமன்றாத்தில் ஆஜராகினர்.
சென்னை உயர் நீதிமன்ற போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ராமமூர்த்தி இன்று தீர்ப்பு அளிப்பதாகத் தெரிவித்திருந்த நிலையில், அவர் இந்தத் தீர்ப்பினை அளிக்கக் கூடாது என்று நீதிமன்றத்துக்கு ஒரு அனாமதேய திடீர் தந்தி வந்தது. இதை அடுத்து, இந்தத் தந்தி விவரத்தை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு எடுத்துச் செல்வதாகக் கூறிய நீதிபதி வழக்கின் தீர்ப்பை வரும் ஏப்.29 ம் தேதி அளிப்பதாகக் கூறி ஒத்திவைத்தார்.
நீதிபதி தீர்ப்பு அளிக்கக் கூடாது என்று வந்த அனாமதேய தந்தியால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.