சென்னையில், ரயில் கொள்ளையர்கள் 5 பேர் கைது: நகைகள், செல்போன்கள் பறிமுதல்
சென்னை: சென்னையில், ஓடும் ரெயிலில் கொள்ளையடித்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.. அவர்களிடம் இருந்து நகைகள், செல்போன்கள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த 20-ந் தேதி, கேரளா மாநிலம் ஆலப்புழையில் இருந்து தன்பாத் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில், பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, அதில் பயணம் செய்த திருப்பதியை சேர்ந்த செங்கல்வராயசாமி(வயது 54) என்பவரிடம், ஒரு கொள்ளை கும்பல் கத்தியை காட்டி மிரட்டி, 3 மோதிரம், 1 சங்கிலி உள்பட 6 சவரன் நகைகளை கொள்ளையடித்தது.
அதே பெட்டியில் பயணம் செய்த மேலும் 4 பேரிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தையும் அந்தக் கும்பல் கொள்ளையடித்தது. ரெயில் பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையத்தை அடைந்த உடன், அந்த கும்பல் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடி விட்டது.
இது குறித்து செங்கல்வராய சாமி பெரம்பூர் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சென்னை சென்டிரல் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படை கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வந்தது.நேற்று, விம்கோ நகர் ரெயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக திரிந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் திருவொற்றியூரை சேர்ந்த பாபு (23), பெங்களூரை சேர்ந்த சுரேஷ் (24), கத்திவாக்கத்தை சேர்ந்த பிரதீப் குமார் (28), ஆரப்பாக்கத்தை சேர்ந்த பைதுல் (26), ஆந்திராவை சேர்ந்த ராஜேஸ் (25) என்பது தெரிய வந்தது. அவர்கள் 5 பேரும் ஆலப்புழை-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வழக்கமாக கொள்ளையடித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து, செங்கல்வராய சாமியிடம் பறித்த 6 சவரன் நகை, பலமுறை இதே ரெயிலில் திருடிய 15 செல்போன்கள், கொள்ளையடித்த பணத்தில் அவர்கள் வாங்கிய பிரிட்ஜ், வாஷிங் மிஷின், இருசக்கர வாகனம் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.பின்னர் அவர்கள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications