புதுச்சேரி: கல்லூரி மாணவர்களை பிளாக்மெயில் செய்து நகை, பணம் பறித்த அரசு மருத்துவர் கைது
புதுச்சேரி: புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களிடம் நகை, பணம் பறித்ததாக அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படித்த மாணவர் ராஜசேகர் கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது சாவுக்கு நீங்கள்தான் காரணம் என அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் சிங்கப்பூர், மலேசிய நாட்டைச் மாணவர்கள் வினோத், சக்திகுமரன், கெளதம் ஆகியோரை ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டியுள்ளது.
இதுதொடர்பாக மாணவர்கள் மூவரும், காவல்துறை உயரதிகாரியிடம் இது தொடர்பாக புகார் அளிக்கச் சென்றனர். அப்போது மாணவர்களை அந்த காவல்துறை அதிகாரியும் மிரட்டினாராம்.
இதைத் தொடர்ந்து மிரட்டல் கும்பல், அம்மாணவர்களை காரில் அழைத்துச் சென்று அவர்களிடமிருந்து நகை, பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டது. மேலும் கூடுதலாக பணம் கேட்டு மீண்டும் அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் மாணவர்களை மிரட்டி வந்துள்ளனர்.
இது குறித்து மாணவர்கள், வெளிநாட்டில் வசிக்கும் தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களது தலையீட்டின்பேரில், கிருமாம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில், அதே கல்லூரியின் முன்னாள் மாணவரும், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருபவருமான மெர்வின்லியோ (26), அதே பகுதியைச் சேர்ந்த ரெளடி கோசா குமார் (30) ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து மாணவர்களைக் கடத்திச் செல்லப் பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
நகை பறிப்பு வழக்கில் ஒரு டாக்டரே ஈடுபட்டுள்ளது புதுச்சேரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.