தூத்துக்குடி : ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரத்தரமாக மூடக்கோரி உண்ணாவிரதம்
தூத்துக்குடி: சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி இன்று தூத்துக்குடியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையினால் தூத்துக்குடி நகர மக்கள் பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என்பது எதிர்பாளர்களின் புகாராகும். எனவே ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டக்குழுவினர் சார்பில் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்படும் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நகர்ப்பகுதிகளில் ஆங்காங்கே கருப்புகொடிகளும் கட்டப்பட்டு இருந்தன.
தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன்அம்புரோஸ் துவக்கி வைத்தார். உண்ணாவிரத போராட்டத்தில் பேராசிரியை பாத்திமாபாபு, வணிகர் சங்க நடராஜன், கிறிஸ்தவர் வாழ்வுரியை இயக்க பகத்சிங், மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல், கம்யூனிஸ்டு கட்சி மோகன்ராஜ் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சிப்காட் வளாகத்திலுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில் இருந்து கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி அதிகாலை சல்பர்டை ஆக்சைடு எனும் விஷவாயு அளவுக்கு அதிகமாக வெளியாகி காற்றில் கலந்தது.
இந்த நச்சுக்காற்றை சுவாசித்த மாநகர மக்கள் கண் எரிச்சல், சுவாசக்கோளாறு, மூச்சடைப்பு போன்ற தொல்லைகளுக்கு ஆளானார்கள். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வணிகர்கள், மதிமுக, கம்யூனிஸ்டு, பாமக உள்ளிட்ட அரசியல்கட்சியினர், சமூகஅமைப்பினர், மீனவர்கள் உள்ளிட்டோர்கள் ஒற்றிணைந்து ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரத்தரமாக மூட வலியுறுத்தி வருகின்றனர். இதனையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆலையை மூடி சீல் வைத்தது இந்த நிலையில் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதனிடையே ஆலையை ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications