ஊழல்வாதிகளைப் பாதுகாப்பவரே அத்வானிதான்....: எதியூரப்பா ஆதவாளர் சராமரி குற்றச்சாட்டு!
பெங்களூர்: ஊழல் விவகாரங்களில் பாஜக ஒருபோதும் சமரசத்துக்கு இடம் கொடுக்காது என்று கூறுகிற அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிதான் ஊழல்வாதிகள் பலரையும் பாதுகாக்கக் கூடியவர்... அவரது குடும்பத்தினர் பாஜக ஆளும் மாநில முதல்வர்களிடமிருந்து முறைகேடான வழிகளில் பணம் பெற்றுள்ளனர் என்று கர்நாடக ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தனஞ்செய குமார் குற்றம் சாட்டியிருக்கிறார்.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அத்வானி, பொதுவாக ஊழல் விவகாரங்களில் பாஜக ஒருபோதும் சமரசத்துக்கு இடம் கொடுக்காது என்றே பேசிவருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய தனஞ்செய குமார், ஊழலைப் பற்றி பேச பாஜகவுக்கு தார்மீக உரிமை எதுவும் கிடையாது. ஊழலில் சிக்கிய பலரையும் அக்கட்சி பாதுகாத்து இருக்கிறது. பாஜக ஆளும் மாநில முதல்வர்களுக்கு நெருக்கடி கொடுத்து ஆதாயம் அடைந்திருக்கின்றனர் அத்வானி குடும்பத்தினர்.
பாஜக எம்.பி. அனந்த்குமார் மீதான ரூ12 ஆயிரம் கோடி ஹட்கோ ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தின் முன்பு நிலுவையில் இருக்கிறது. பாஜக தலைவராக இருந்த நிதின் கத்காரி மீது ஏராளமான ஊழல் புகார்கள் எழுந்ததாலேயே அவர் மீண்டும் தலைவராக முடியவில்லை. இதேபோல் கர்நாடகா பாஜக முன்னாள் தலைவர் ஈஸ்வரப்பாவும் முறைகேடாக சொத்து குவித்திருக்கிறார் என்று சாடினார்.
எதியூரப்பா மன்னிப்பு
ஆனால் தனஞ்செய குமாரின் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கும் கர்நாடக ஜனதா கட்சியின் தலைவரான எதியூரப்பா, அத்வானி நான் மதிக்கக் கூடிய தலைவர்களில் ஒருவர். தனஞ்செய குமார் ஏன் அப்படிக் கூறினார் எனத் தெரியவில்லை. இதற்காக அவர் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications