3 நாட்களில் 3 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட திருமணமான இளம்பெண்
அவுரங்காபாத்: மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் 19 வயது திருமணமான பெண் 3 நாட்களில் 2 தடவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் நகரில் உள்ள சஞ்சய் நகரைச் சேர்ந்தவர் 19 வயது உஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருமணமானவர். அவர் சிட்கோ பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றார். அப்போது அவரை வழியில் மடக்கி உள்ளூர் ரவுடியான வினோத் சால்வே என்பவர் அவரை கற்பழித்துள்ளார். இது குறித்து யாரிடமாவது கூறினால் பின் விளைவுகளை சந்திக்க நேரும் என்று மிரட்டியுள்ளார். அதனால் உஷா இந்த சம்பவம் பற்றி வாய் திறக்கவில்லை.
இந்நிலையில் உஷா நேற்று முன்தினம் இரவு பெற்றோர் வீட்டில் இருந்து கணவர் வீட்டுக்கு செல்ல ஆட்டோவுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோவில் இருந்த டிரைவர் மனோஜ் ஜாதவ், சங்கர்ஷ் பி லான்ட்கே மற்றும் சாகர் தல்வி ஆகியோர் உஷாவை ஆட்டோவில் கடத்தி ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு வைத்து லான்ட்கேவும், ஜாதவும் கற்பழித்துள்ளனர். இதையடுத்து உஷா நடந்தது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் அவரை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.