மி்ன்னல் தாக்கி 2 பெண்கள் பலி- 3 பேர் படுகாயம்
நெல்லை: நெல்லை அருகே மின்னல் தாக்கி இரண்டு பெண்கள் பலியாகினர். மூன்று பேர் காயம் அடைநதனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது. இந்நிலையில் நாங்குநேரி சேரன்மகாதேவி, வள்ளியூர், ஆலங்குளம் உள்ளி்ட்ட சில பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் பரிதாபமாக இறந்தனர். இரு மாணவர்கள் மற்றும் ஒரு பெண் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர்.
விஜயநாராயணம் அருகேயுள்ள பற்பநாதபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் மகராசி. இவர் நேற்று மாலை வயலுக்கு சென்று வி்ட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென பலத்த மழை பெய்யவே இவர்கள் அங்குள்ள உய்க்காட்டன் சுடலைமாடசாமி கோவில் அருகே ஒதுங்கினர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மகராசி இறந்தார். இது,குறித்து விஜயநாராயணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கரைபட்டி அருகேயுள்ள மேலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் சுப்பம்மாள். இவர் நேற்று அங்குள்ள காட்டுபகுதியில் கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மழை பெய்யவே அவர் அவசர அவசரமாக வீடு திரும்பினார். அப்போது திடீரென மின்னல் தாககியதில் அவர் சுருண்டு விழுந்து மயங்கினார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சேர்த்தனர்.
ஆனால் சிறிது நேரத்திலேயே சுப்பம்மாள் இறந்தார். மூன்னிர்பள்ளம் அருகே பொன்னாக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த சடையன் மகன் நடராஜன், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஜோதிராமன். இவர்கள் 9, 7ம் வகுப்பு முடித்துள்ளனர். நேற்று மாலை வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியது. இதில் காயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மூன்றடைப்பை சேர்ந்த சாமூவேல் மனைவி மைக்கேல். இவர் ஊருக்கு வெளியே உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மழை பெய்யவே அங்குள்ள மோட்டார் பம்பு ஷெட்டில் ஒதுங்கினார். அப்போது மின்னல் தாக்கியதில் காயமடைந்த மைக்கேல் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.