கோவை தீ விபத்து: 2 பேர் கைது… வணிக வளாக உரிமையாளர் தலைமறைவு
கோவை: கோவை வணிக வளாகத்தில் நேற்று நிகழ்ந்த தீவிபத்து தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான வணிக வளாக உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை லட்சுமி மில்ஸ் சந்திப்பில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, கோவை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் போதிய தீத்தடுப்பு உபகரணங்கள் வைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
மேலும் அனுமதி பெறப்பட்டதை விட இரண்டு தளங்கள் கூடுதலாக கட்டப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு செயல்பட்ட நிறுவனத்தின் மேலாளர் பாஸ்கர், நிர்வாகி கோபால கிருஷ்ணன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவான வணிக வளாகத்தின் உரிமையாளர் ராஜேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
விதிமீறி கட்டப்பட்ட கட்டிடத்தின் இரண்டு தளங்களை இடிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.