திமுகவில் இருந்து குஷ்வுக்கு கமுக்கமாக கல்தா கொடுக்க முடிவு?
சென்னை: திமுகவில் உறுப்பினராக சேர்ந்தது முதல் ஆர்பாட்டமாக வளைய வந்த குஷ்புவிற்கு சைலண்டாக கல்தா கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.
திமுகவைப் பொருத்தவரை எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் குஷ்பு விவகாரத்தில் இப்போது என்ன நடக்கிறது என்று கேட்டால் பெரும்பாலனவர்கள் சிரித்து மழுப்புகின்றனர்.
அவர் திமுகவில்தானே உறுப்பினராக இருக்கிறார் என்று கேட்டால் இருக்கிறார் ஆனால் இல்லை என்று வடிவேலு பாணியில் கூறுகின்றனர் பலரும். ஏனெனில் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டை கூட குஷ்புவிற்கு வழங்கப்படவில்லையாம்.
இதிலிருந்தே கட்சியை விட்டு குஷ்புவை சைலண்டாக ஓரங்கட்டும் முயற்சிகள் நடந்து வருவதை தெரிந்து கொள்ளலாம் என்கின்றனர் திமுகவின் முக்கிய புள்ளிகள்.
பெண்களுக்கு பொறுப்பு
திமுகவில் பெண்களுக்கு என்று தனிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டது கிடையாது. கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கொடுக்கப்பட்ட பின்னர் பல திமுகவினர் தங்களின் வீட்டுப் பெண்களை கட்சியில் ஈடுபட வைத்தனர். தமிழச்சி தங்கப் பாண்டியன் கூட அப்படி வந்தவர்தான்.
குஷ்புவின் வருகை
குஷ்புவின் வருகைக்குப்பின்னர் பல பெண்மணிகளுக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டது. குஷ்புவிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இது கோபாலபுரம் தொடங்கி திமுகவில் உள்ள முக்கிய பெண்மணிகள் வரை பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையாகத்தான் இருந்தது.
தலைகீழாக திரும்பிய பேட்டி
இந்த நிலையில் தலைவர் குறித்த பேட்டி வசமாக சிக்கவே அடித்து துவைத்துவிட்டனர். அதிலிருந்தே சைலண்ட் நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டனவாம்.
14 வது உட்கட்சித் தேர்தல்
திமுகவில் 14 வது உட்கட்சித் தேர்தலுக்கு உறுப்பினர் சேர்க்கை முடிவடைந்துள்ளது. ஓட்டுப்போட வருபவர்கள் திமுக உறுப்பினர் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அடையாள அட்டை இல்லை
இதில்தான் சிக்கலே உருவாகியுள்ளது தென்சென்னை மாவட்டம் மயிலாப்பூரில் வசிக்கும் குஷ்புவிற்கு புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டை கொடுக்கப்படவில்லையாம்.
யாரிடமும் பதில் இல்லை
இதுபற்றி மாவட்ட செயலாளர், வட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர் என யாரிடம் விசாரித்தாலும் உரிய பதில் இல்லை என்கின்றனர்.
அடையாளத்தை பறிக்க முயற்சி
உறுப்பினர் அடையாள அட்டை கொடுக்காமல் திமுகவில் இருந்து குஷ்புவின் அடையாளத்தை சைலண்டாக பறிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கிசுகிசுக்கின்றனர்.
குஷ்பு என்ன சொல்கிறார்
இதுபற்றி குஷ்பு கூறிய பதில்தான் குழப்பமாக இருக்கிறது திமுகவில் நான் உறுப்பினராக இருப்பதற்குப் பெருமைப் படுகிறேன். இதையெல்லாம் பெரிது படுத்த வேண்டாம் என்ற ரீதியில் பதில் சொல்லியிருக்கிறார்.
அரசியலில் எப்பொழுதும் எதுவும் நடக்கலாம் என்பார்கள் குஷ்பு விசயத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.