ஹரித்வாரில் மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டத்தை கைவிட்ட காங்கிரஸ்
ஹரித்வார்: உத்தர்காண்ட் மாநிலம் ஹரித்வார் வருகை தரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்த காங்கிரஸ் கட்சி கடைசி நேரத்தில் அதை கைவிட்டது.
ஹரித்வாருக்கு நரேந்திர மோடி மதவாதத்தின் அடையாளம் என்பதால் அவருக்கு கறுப்புக் கொடி காட்டுவோம் என்று ஆளும் காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இதற்கு அம்மாநில பாரதிய ஜனதா கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தது.
உத்தர்காண்ட் மாநில பாஜக மூத்த தலைவரான ஹர்பன்ஸ் கபூர், நாட்டின் மிக உயரிய பொறுப்புக்கான தலைவராக நரேந்திர மோடி உருவெடுத்து வருகிறார். அவரது நிர்வாக ஆட்சி முறையானது நாடு முழுவதும் பின்பற்றக் கூடிய ஒரு முன்னுதாரணத்துக்குரியதாக இருக்கிறது. இப்படியான ஒரு சூழலில் மோடியை ஒரு மதவாதியாக சித்தரிப்பது கண்டனத்துக்குரியது.
1984 ஆம் ஆண்டு சீக்கியர் கலவரத்தின் போது என்ன நடந்தது என்பதை காங்கிரஸ் மறந்துவிடக் கூடாது. நரேந்திர மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவமதித்தால் ஏப்ரல் 28-ல் தொடங்கப் போகும் உள்ளாட்சித் தேர்தலில் எதிர்விளைவுகளை அனுப்பவிக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மோடிக்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்டிருக்கிறது.
ம.பி.யில் பாஜகவில் 2 ஆயிரம் முஸ்லிம்கள் இணைந்தனர்
இதனிடையே மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைய்னியில் சுமார் 2ஆயிரம் முஸ்லிம்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். சமூக ஆர்வலர் சையத் தாரிக் அலி தலைமையில் மாநில பாஜக தலைவர் நரேந்திர தோமர், துணைத் தலைவர் ரகுநாதன் சர்மா, பிரதேச அமைப்பு செயலாளர் ராகேஷ் தகோர் ஆகியோர் முன்னிலையில் அவர்கள் இணைந்தனர். முன்னதாக பிரம்மாண்ட பேரணி ஒன்றும் நடத்தப்பட்டது. தற்போது பாஜகவில் இணைந்திருக்கும் இவர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications