குழந்தைகளை காப்பாற்ற முயற்சித்த ஆஸ்திரேலிய ஹாக்கி வீரர்- அரிய வகை விஷப் பாம்பு கடித்து பலி!!

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் பேர் பாம்புக்கடிக்கு சிகிச்சைப் பெறுகின்றனர். இதில் 300 முதல் 500 பேருக்கு விஷமுறிவு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உலகிலே அரிய வகை கொடிய விஷப்பாம்புகள் 25 இருக்கின்றன என கணக்கிடப்பட்டுள்ளன. இதில் 20 கொடிய விஷப் பாம்புகள் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கின்றவாம்..
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் வடக்கு மாகாணத்தில் வசித்து வந்த 26 வயதான ஹாக்கி வீரர் கார்ல் பெர்ரி, வீட்டுக்கு அருகில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு உடற்பயிற்சிக்காக சென்றிருந்தார். அப்போது பழுப்பு நிறப் பாம்பு ஒன்று மைதானத்துள் ஊர்ந்து செல்வதை கண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை பாம்பு கடித்துவிடக் கூடாது என்பதற்காக லாவகமாக கையில் பிடித்து புதருக்குள் வீசி எறிந்துவிட்டு வழக்கம் போல உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் சிறிது தூரம்தான் கார்ல் பெர்ரி சென்றிருப்பார்...அதற்குள் கீழே மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது சற்றே சுயநினைவுடன் இருந்த கார்ல் பாம்பை பிடித்து தூக்கி எறிந்ததை கூறியிருக்கிறார். உடனடியாக அவரை சோதித்த போது விரலில் பாம்பு கடித்தது தெரியவந்தது. இதனால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கார்ல் பெர்ரி உயிரிழந்தார். பின்னர் மருத்துவர்கள் கார்ல் பெர்ரி அரிய வகை விஷப்பாம்பு கடித்து உயிரிழந்திருப்பதாகத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications