மரக்காணத்தில் தலித்களே தாங்கள் குடிசைகளுக்கு தீ வைத்துக் கொண்டனர்: அன்புமணி சொல்கிறார்

மாமல்லபுரத்தில் பாமக சார்பில் நடந்த சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் கலந்து கொண்டு வேனில் ஊர் திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஆம்பூரைச் சேர்ந்த பாமக தொண்டரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூற அன்புமணி ஆம்பூர் வந்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், மரக்காணம் கலவரம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டதாகும். கலவரத்திற்கு முக்கிய காரணம் தொல்.திருமாவளவனும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் தான். வாகனங்கள் சேதமடைந்ததும் எங்கள் கட்சியினரின் வாகனங்கள் தான். எல்லா இழப்புகளும் எங்களுக்குத்தான்.
தர்மபுரி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.8 கோடி அளவில் நிவாரணம் வழங்கப்பட்டது. அது போல நமக்கும் கிடைக்கும் என மரக்காணத்தில் அவர்களாகவே தங்களுடைய குடிசைகளுக்கு தீ வைத்துக் கொண்டனர். இந்த கலவரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.
கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும், பதற்றமான சூழ்நிலை உண்டாகும் என்றார்.












Click it and Unblock the Notifications