பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ்.. திருவண்ணாமலையில் டாக்டர் மீது தாக்குதல்; மருத்துவமனை சூறை!
திருவண்ணாமலை: பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பியதாக டாக்டருக்கு அடி, உதை விழுந்தது. மேலும் அவரது மருத்துவமனையும் சூறையாடப்பட்டது.
திருவண்ணாமலையில் ஒரு அறக்கட்டளை நடத்தி வரும் ரவி என்பவரின் மனைவி சுஜாதா சிகிச்சைக்காக அதே ஊரில் தென்றல் நகர் மெயின் ரோட்டில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் ராமகிருஷ்ணனிடம் வந்துள்ளார்.
ராமகிருஷ்ணனும், டாக்டரான அவரது மனைவி அனுவும் இந்த மருத்துவமனையை நிர்வகித்து வருகின்றனர்.
இந் நிலையில் தன்னிடம் சிகிச்சை வந்த சுஜாதாவின் செல்போன் நம்பரை வாங்கிய டாக்டர் ராமகிருஷ்ணன் அவருக்கு அடிக்கடி ஆபாச எஸ்.எம்.எஸ்களை அனுப்பினாராம்.
இது குறித்து சுஜாதா தனது கணவர் ரவியிடம் கூறவே அவர் நேற்று காலை மருத்துவமனைக்கு வந்து டாக்டர் ராமகிருஷ்ணனை நேரில் சந்தித்து கண்டித்துள்ளார். மேலும் இது குறித்து ராமகிருஷ்ணனின் மனைவி அனுவிடமும் புகார் கூறியுள்ளார்.
இந் நிலையில் இன்னொரு நம்பரில் இருந்து சுஜாதாவுக்கு மீண்டும் ஆபாச எஸ்.எம்.எஸ். வந்ததாம். இதையும் வேறு சிம்கார்ட் போட்டு டாக்டர் ராமகிருஷ்ணன் தான் அனுப்பியிருக்க வேண்டும் என்று சந்தேமடைந்த ரவியும் அவரது மனைவி சுஜாதா மற்றும் 10 பேர் ராமகிருஷ்ணனின் மருத்துவமனைக்கு வந்து அவரைத் தாக்கினர்.
மேலும் மருத்துவமனையின் கண்ணாடிகள், நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். அங்கு பொதுமக்கள் கூடவே, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சென்று விட்டனர்.
இது குறித்து டாக்டர் ராமகிருஷ்ணன் போலீசில் புகார் செய்தார். அதில், ரவியின் மனைவி சுஜாதா என்னிடம் சிகிச்சை பெற்று வந்தார். அவர் எனக்கு அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்புவார். இதை நான் கண்டித்தேன். இதனால் சுஜாதா தற்கொலைக்கு முயன்றார். இதில் ஆத்திரமடைந்த ரவி மற்றும் சிலர் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.