முன்விரோதம்: ஹரியானாவில் 10ம் வகுப்பு மாணவனை சுட்டுக் கொன்ற சக மாணவர்கள்
ரோஹ்தக்: ஹரியானாவில் 10 வகுப்பு மாணவனை சக மாணவர்கள் சேர்ந்து சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டம் மேஹம் நகரில் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. அப்போது அங்கூர் என்ற மாணவனை ஒரு கும்பல் தாக்கியுள்ளது. இதைப் பார்த்த 10ம் வகுப்பு மாணவன் நிதின்(15) தனது நண்பன் அங்கூரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர் தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து நிதினை சுட்டுக் கொன்றார்.
நிதினை சுட்டுக் கொன்றவர் அவருடன் ஒரே வகுப்பில் படித்தவர். மேலும் அங்கூரைத் தாக்கியவர்களும் நிதினுடன் படித்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதினை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 4 குற்றவாளிகளில் 3 பேரை கைது செய்தனர். இதற்கிடையே ஒரு கும்பல் குற்றவாளிகளில் ஒருவரின் வீட்டை சூரையாடியதுடன் கார் ஒன்றுக்கு தீ வைத்தது.
இந்த சம்பவத்தைக் கண்டித்து நிதினின் குடும்பத்தார் மற்றும் ஆதரவாளர்கள் மேஹம் காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இரண்டு கும்பலைச் சேர்ந்த சிறுவர்களுக்கிடையேயான முன்விரோதம் காரணமாகத் தான் இந்த கொலை நடந்தது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications