புதுவையில் கோஷ்டி மோதல்: 7 இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசிய முகமூடி மனிதர்கள்- 3 பேர் காயம்
புதுச்சேரி: புதுவையில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 7 இடங்களில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
புதுவை வம்பாகீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் மணவாளன். அவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் ராஜசேகரன் தவளக்குப்பம் அருகே இருக்கும் நரம்பை கிராமத்திற்கு இன்று சென்றார்.
அப்போது மணவாளனின் ஆதரவாளர்கள் ராஜசேகரனை அரிவாளால் வெட்டினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவத்தால் வம்பாகீரப்பாளையத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அப்போது முகமூடி அணிந்து 3 பைக்குளில் 6 பேர் அங்கு வந்தனர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை 7 இடங்களில் வீசினர்.
அதில் ஒரு குண்டு ஆட்டோ அருகே விழுந்து வெடித்தது. இதில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த சங்கர் மற்றும் 2 பெண்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடிகுண்டை வீசியவர்கள் யார் என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தால் அங்கு பதட்டமாக உள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications