இன்சூரன்ஸ் பணத்துக்காக கையை வெட்டிக் கொண்ட நபர்! ரூ. 15 கோடியும் போச்சு..
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் விபத்து இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காக ஒரு நபர் கையை வெட்டிக் கொண்டு தற்போது சிக்கலில் மாட்டி தவிக்கிறார்.
இறந்ததுபோல் நடித்து இன்சூரன்ஸ் தொகையைப் பெற முயன்று மாட்டிக்கொள்ளும் கவுண்டமணி, செந்தில் நகைச்சுவைக் காட்சியை திரைப்படத்தில் பார்த்து வயிறு குலுங்க சிரித்திருப்பீர்கள். ஆனால், ஸ்பெயினில் நடந்த கதையோ சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டது மாதிரியானது.
பெயர் குறிப்பிடப்படாத இந்த நபர் பல இன்சூரன்ஸ் நிறுவனங்களில் காப்பீடு செய்திருந்தாராம். வாழும்போதே அதிலிருந்து இழப்பீடு தொகையை பெற விரும்பியுள்ளார்.
இதற்காக அவர் தனது கையை தானே துண்டித்துக் கொண்டு விபத்தில் சிக்கி கையை இழந்து விட்டதாக கூறி ரூ.15 கோடி (1.78 மில்லியன் பவுண்ட்) இழப்பீடு கேட்டு முறையீடு செய்தார். ஆனால் காயத்தின் தன்மை இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
எனவே தீவிர மருத்துவ சோதனை நடத்திய போது அவருடைய நாடகம் வெட்டவெளிச்சமானது. இதன் விளைவு இன்சூரன்ஸ் பணம் கைக்கு கிட்டாமல் போனதுடன் துண்டித்த கைக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் பணத்தை செலவிட நேரிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்.












Click it and Unblock the Notifications