இலங்கையில் சிறையில் வாடும் 26 மீனவர்கள்: மே 6 வரை காவல் நீட்டிப்பு
கொழும்பு: நாகப்பட்டினம் அருகே இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 26 இந்திய மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மேட்டை சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் பட்டினச்சேரியை சேர்ந்த 22 மீனவர்கள், கடந்த 3-ம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 8 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்கள் 26 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 19-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் இலங்கையின் அனுராதாபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. எனினும் ஏப்ரல் 26ம் தேதி வரை அவர்களது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
அதன்பிறகும் அவர்களை விடுவிக்க முன் வராத யாழ்ப்பாணம் நீதிமன்றம், அவர்களின் காவலை வரும் மே மாதம் 6ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதனால் மீனவர்களின் குடும்பங்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.