4 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்கள் மூவர் ஈரானில் சிறையில்...!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் ஈரானில் சிறைபிடிக்கப் பட்டுள்ள தகவல் நான்கு மாதங்களுக்கு பின்னர் தெரிய வந்துள்ள சூழ்நிலையில் அவர்களை மீட்க அவர்களது குடும்பத்தினர் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்..
கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரம் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சகாய மைக்கேல் ஆண்டனி (வயது25), ஆண்டனி சுரேஷ்(26), ஆரோக்கியகெவின்ராஜ்(23). இவர்கள் 3 பேரும் சவுதி அரேபியாவில் தங்கியிருந்து மீன் பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
இவர்கள் 3 பேரும் ஒரு விசைப்படகு மூலம் கடந்த டிசம்பர் மாதம் ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஈரான் கடற்படையினர் கன்னியாகுமரி மீனவர்களை சிறை பிடித்தனர். பிறகு அவர்களை படகுடன் பந்தராபஸ் என்ற இடத்திற்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு அந்த 3 மீனவர்களும் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களை காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட தகவல் 4 மாதம் கழித்து தற்போது தான் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தெரிய வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அந்த மீனவர்களை சிறையில் இருந்து மீட்க அவர்கள் முயற்சியில் இறங்கியுள்ளனர். தமிழக அரசு, குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். ஆரோக்கியபுரம் பங்கு நிர்வாகம் சார்பிலும் மீனவர்களை மீட்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications