பாஜக காவி கட்டிய காங்கிரஸ்; காங்கிரஸ் கதர் போட்ட பாஜக: சீமான் கடும் தாக்கு

நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சீமான் சிறப்பு விருந்தினாரக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
தமிழ்நாட்டில் பல்வேறு தடங்களில் பயணித்து வரும் நான் பலதரப்பட்ட மக்களோடு பழகி அவர்களது மனக்குமுறல்கள், காயங்களை கேட்டறிந்து வருகின்றேன். தமிழ்நாட்டில் எவரும் தமிழர் இல்லை. இது வரலாற்று உண்மை. நிகழ்கால நிஜம். பல மாவட்டங்களிலும் சாதியவாதிகளாக, மதவாதிகளாக தான் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக வலிமையான அரசியல் கட்சிகளாக ஆக்கி வைத்து இருக்கிறார்கள். காரணம் மதம். இது தான் தமிழ் இனத்துக்கு நேர்ந்த அவலம்.
தமிழர்கள் எண்ணக்கையில் தான் 8 கோடி பேர். இவர்களில் எவரும் தமிழர் இல்லை. எவராவது ஒருவர் இந்த காரணத்துக்காக காங்கிரஸ் கட்சி தேவை என்று ஒரு காரணம் சொல்ல முடியுமா? பின்பு எதற்கு காங்கிரஸ் கட்சி?
காங்கிரசை மிதவாதம் என்றும், பாஜகவை தீவிரவாதம் என்றும் சொல்கிறார்கள். இரண்டு பேருமே ஒன்று தான். பாஜக காவி கட்டிய காங்கிரஸ். காங்கிரஸ், கதர் போட்ட பாஜக. இரண்டு கட்சிகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
அமைதியான மக்களை அடக்கி ஒடுக்குவது தான் இந்த நாட்டில் ஜனநாயகமாக உள்ளது. இந்த நிலைகளை மாற்றத் தான் மாற்று அரசியல் புரட்சியை இந்த மண்ணில் கொண்டு வருகிறோம். இது எளிய மக்கள் எடுக்கும் புரட்சி.
நாம் தமிழர் கட்சியை நாங்கள் தொடங்கவில்லை. சி.பா. ஆதித்தனார் தொடங்கினார். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழங்கிய பெருமகனார் தொடங்கிய கட்சி. எந்த நோக்கத்துக்காக அவர் தொடங்கினாரோ, அந்த நோக்கம் நிறைவேற அவர் நிறுத்திய இடத்தில் இருந்து மானப்பிள்ளைகளான நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.
தமிழ் மீட்சி தான் தமிழர் எழுச்சி. ஊழலற்ற, நீதியான, நேர்மையான ஆட்சி, இது தான் எங்களது கொள்கை. எளிமையான பிள்ளைகளான எங்களுக்கு உங்கள் ஆதரவை கொடுத்து வலிமையான அரசியல் சக்தியாக மாற்ற வேண்டும். இது வரலாற்று தேவை. காலத்தின் கட்டாயம். இதை உணர்ந்து எங்களோடு அணி திரள்வீர்கள் என்று நம்புகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications