திருச்சி சிறையில் 'காந்திய சிந்தனை' புத்தகம் படிக்கும் ராமதாஸ்!!

மரக்காணம் கலவரத்தை கண்டித்து அனுமதியின்றி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட 51 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முதுகு வலி காரணமாக மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெற்று ராமதாஸ் தனது காரிலேயே சிறைக்கு வந்தார். நேற்று முன்தினம் பகலில் கைது செய்யப்பட்ட அவர் நேற்று காலை 4.30 மணிக்கு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் மருத்துவர்கள் இன்சுலின் ஊசி போட்டனர். அவருக்கு வெளியில் இருந்து உணவு வழங்க சிறை நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதையடுத்து காலையில் 2 சப்பாத்தியும் குர்மாவும், மதியம் சாம்பார் சாதமும், தயிர் சாதமும் வழங்கப்பட்டது. அவர் வைத்திருந்த பிஸ்கட்டுகளை அவ்வப்போது சாப்பிட்டார்.
திருச்சியில் வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் மின்தடை ஏற்படுவதால் அவர் புழுக்கத்தில் அவதிப்படுகிறார். அவர் தனக்கு முதல் வகுப்பு வேண்டும் என்று இதுவரை கேட்வில்லை. சிறையில் காந்திய சிந்தனை புத்தகத்தை படித்து வருகிறார். சிறையில் ஏற்கனவே 1,700க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில் கூடுதலாக பாமகவினர் அடைக்கப்பட்டுள்ளதால் வழக்கமாக வழங்கப்படும் காவிரி குடிநீரோடு மாநகராட்சி லாரிகளில் குடிநீர் கொண்டு வரப்பட்டு வழங்கப்படுகிறது.
ராமதாஸுடன் மாநில தலைவர் ஜி.கே.மணி, கணேஷ் குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. செந்தமிழ்செல்வன், அனந்தராமன் ஆகியோரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கணேஷ் குமார் எம்.எல்.ஏ. என்பதால் அவருக்கு மட்டும் முதல் வகுப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications