பாகிஸ்தான் சிறைகளில் அடைபட்டுள்ள 23 இந்தியர்களின் மனநலம் பாதிப்பு -இந்திய, பாக். நீதித்துறை கமிட்டி
டெல்லி: பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 23 இந்தியர்க் கைதிகளின் மனநலம், உடல்நலம் பாதிப்படைந்திருப்பதாக இந்திய, பாகிஸ்தான் நீதித்துறை கமிட்டி தெரிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் இடையே கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டன. அது இந்திய, பாகிஸ்தான் நீதித்துறை கமிட்டி எனப் பெயரிடப்பட்டது. இந்த கமிட்டியில் இந்திய தரப்பில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.எஸ். கில், எம்.ஏ.கான் ஆகியோரும், பாகிஸ்தான் சார்பில் முன்னாள் நீதிபதிகள் அப்துல் காதிர் சவுத்ரி, நாசிம் ஆசியம் ஜாகித், மியான் முகமது அஜ்மல் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
சமீபத்தில் பாகிஸ்தானில் லாகூர் கோட் லக்பட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மரண தண்டனை கைதியான இந்தியர் சரப்ஜித் சிங், சக கைதிகளால் கொலை வெறி தாக்குதலுக்கு ஆளான நிலையில், அங்கு பல்வேறு சிறைகளில் உள்ள இந்திய கைதிகளை இந்திய-பாகிஸ்தான் நீதித்துறை கமிட்டியினர் கடந்த வாரம் பார்வையிட்டனர்.
இந்திய-பாகிஸ்தான் நீதித்துறை கமிட்டியினர் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் சிறைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அவர்கள் முன்பாக 535 இந்திய கைதிகள் (இவர்களில் 483 பேர் மீனவர்கள்) ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதில், லாகூர் கோட் லாக்பட் சிறையில் 20 இந்தியர்களும், ராவல்பிண்டி அடியாலா சிறையில் 2 இந்தியர்களும், கராச்சி மாலிர் சிறையில் ஒரு இந்தியரும் என 23 பேர் மனநிலை பாதித்தவர்களாக காணப்படுவதாகவும், இவர்கள் சிகிச்சைக்காக எந்தவொரு மருத்துவமனைக்கும் அழைத்து செல்லப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. .
இந்திய-பாகிஸ்தான் நீதித்துறை கமிட்டியினர், மிகவும் உடல் நலமற்று இருக்கிறவர்களை, மனநலம் பாதித்தவர்களை, செவித்திறன் இழந்தவர்களை, பேச இயலாதவர்களை உரிய மருத்துவமனையில் அனுமதித்து சரியான சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்துள்ளனர்.
இத்தகைய கைதிகளை, இளங்குற்றவாளிகளை, பெண்களை, முதியவர்களை கருணை அடிப்படையில், மனித நேய அடிப்படையில் நடத்துவதற்கு ஏற்ற வழிமுறை காண வேண்டும் என்றும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியக் கைதிகளையும், இந்திய சிறையில் உள்ள பாகிஸ்தான் கைதிகளையும் வருடத்துக்கு குறைந்தது 4 முறையாவது தூதரக அதிகாரிகள் பார்த்து வர வகை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications