தமிழக மக்களுக்கு விரைவில் காவிரி நீர் கிடைக்க மத்திய அரசு உதவ வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேள்வி:- குறைந்த விலையில் காய்கறி விற்கும் திட்டத்தை முதல்வர் துவக்கிவைக்கப் போவதாகவும், இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு நுகர்வோர், விவசாயிகள் நேரடியாகப் பயன்பெறுவார்கள் என்றும் செய்தி வந்திருக்கிறதே?.
பதில்:- குறைந்த விலையில் மக்களுக்கு காய்கறி விற்கப்பட வேண்டும் என்பதற்காகவே திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் தான் உழவர் சந்தைகள் திட்டம். இந்தத் திட்டத்திலே பஸ்களிலே காய்கறிகளை ஏற்றிவருவதற்கான லக்கேஜ் கட்டணம் கிடையாது.
விவசாயிகள் உழவர் சந்தைகளிலே தங்கள் பொருட்களை வைத்து விற்பதற்கு வாடகை கிடையாது. தராசு எடைக் கற்களைக் கூட அரசே இலவசமாக வாங்கி வழங்கும்.
14-11-1999 அன்று தான் முதன்முதலாக இத்திட்டம் மதுரை மூதூரில் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட நாளன்றே 4,500 கிலோ காய்கறிகள் 115 விவசாயிகள் மூலம் கொண்டு வரப்பட்டு அவை அனைத்தும் பிற்பகல் 4 மணி அளவிலேயே விற்கப்பட்டுவிட்டன. 4,000 பொதுமக்கள் நேரடியாக வந்து அந்தக் காய்கறிகளை விலைக்கு வாங்கிச் சென்றார்கள்.
100-வது உழவர் சந்தை 14-11-2000 அன்று காஞ்சீபுரம் மாவட்டம் பல்லவபுரத்திலே திறந்து வைக்கப்பட்டது. ஒரே ஆண்டில் 100 உழவர் சந்தைகள் திறந்து வைக்கப்பட்டன என்ற ஒன்றில் இருந்தே அந்தத் திட்டத்திற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்த உழவர் சந்தைகள் திட்டத்தைத் தான் தற்போது இந்த ஆட்சியினர் மீண்டும் தொடங்கிட முடிவு செய்துள்ளார்கள்.
கேள்வி:- காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடுவதற்கு காவிரித் தாய் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் காரணம் என்று பாராட்டு விழா எல்லாம் நடைபெற்றதே, காவிரித் தண்ணீர் வந்து விட்டதா?.
பதில்:- காவிரித் தண்ணீரை தமிழகத்திற்கு விடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தான், நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு ஏன் இன்னும் மத்திய அரசிதழில் வெளியிடப்படவில்லை, உடனே அதனை வெளியிட வேண்டுமென்று ஆணையிட்டு, அதன்படி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டால், காவிரி நதி மேலாண்மை வாரியம், காவிரி நதி ஒழுங்கு முறைக் குழு ஆகியவற்றை மத்திய அரசு நியமிக்க வேண்டும். அது பற்றி நமது முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதிவிட்டு, அதை நாளேடுகளிலும் வெளியிட்டார். உடனடியாக மத்திய அரசு பதில் எழுதாததால், அந்தக் குழுக்களை அமைக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசிடம் அது பற்றி விளக்கம் கேட்டுள்ளது.
இந்த நிலையில் தான் மத்திய அரசின் நீர் வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவத் செய்தியாளர்களிடம் கூறும்போது, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரி நதி மேலாண்மை வாரியம், காவிரி நதி ஒழுங்கு முறைக் குழு ஆகியவற்றை உருவாக்குவது தொடர்பாக மத்திய சட்டத்துறையின் கருத்தை மத்திய நீர் வளத்துறை கோரியுள்ளது. இந்த விவரத்தை சுப்ரீம் கோர்ட்டிலும் மத்திய அரசு கடந்த முறை நடைபெற்ற விசாரணையின்போது தெளிவுபடுத்தியுள்ளது. மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை விளக்கி தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
இந்த நிலையில் கர்நாடக சட்டப் பேரவைக்கு மே 5-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவடையும் வரை காவிரி அமைப்புகள் தொடர்பான நடவடிக்கையை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மத்திய நீர்வளத்துறை நிறுத்தி வைத்துள்ளது. மத்திய சட்டத் துறையின் கருத்துக் கிடைத்ததும், சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் நிலையைத் தெரிவித்து அதன் அறிவுரை கோரப்படும். சுப்ரீம் கோர்ட்டு என்ன உத்தரவு பிறப்பிக்கிறதோ அதற்குத்தக்கபடி மத்திய அரசு செயல்படும் என்று கூறியிருக்கிறார்.
அதன்படி மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, சுப்ரீம் கோர்ட்டில் கருத்துக்களைத் தெரிவித்து தமிழக மக்களுக்கு விரைவில் காவிரி நீர் கிடைக்க உதவிட வேண்டுமென்று திமுக சார்பில் நான் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications