பாமகவினரின் வன்முறை செயல்கள் நாகரீகமான அரசியல் அல்ல: சீமான் தாக்கு

Subscribe to Oneindia Tamil

Seeman
சென்னை: அரசு தொடுத்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க நீதிமன்றத்தைத் தான் நாட வேண்டுமே தவிர வன்முறையில் ஈடுபடுவதும், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் அவர்கள் காயமடைகிற அளவிற்கு கண்மூடித்தனமான வன்முறையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஈடுபடுவதும் நாகரீகமான அரசியல் அல்ல என்று நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மாமல்லபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்திய கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களும், அக்கட்சியின் முன்னணித் தலைவர்களும் ஆற்றிய உரைகளும், அக்கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களுக்கும், வழியேற இருந்த தாழ்த்தப்பட்டோர் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே நடந்த மோதலும், அது தொடர்பாக விசாரணை கோரி போராட்டத்தில் ஈடுபட்டபோது மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் கோ.க. மணி உள்ளிட்ட 400 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து நடந்து வரும் வன்முறை நிகழ்வுகளும் மிகுந்த கவலையளிக்கிறது.

மாமல்லபுரம் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையிலான வன்முறையில் மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமுற்றுள்ளனர்.

இது போல் ராமதாஸ் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பேருந்து உள்ளிட்ட பொது சொத்துக்களை குறிவைத்து நடந்துவரும் தாக்குதலிலும் அப்பாவிகள் பலர் காயமுற்றுள்ளனர்.

கடலூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த எமது கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத் தென்னரசன் வந்த கார் மீது பெரிய கல்லை எறிந்து நடந்த தாக்குதலில், அவருடைய விலா எலும்பு முறிந்து படுகாயமுற்றுள்ளார். இப்படி பொது மக்களில் பலரும் காயமுற்றுள்ளனர். தமிழ்நாட்டில் சாலை பயணம் ஆபத்தானதாக மாறியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசுக்கும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைக்கும் நாம் தமிழர் கட்சி இரண்டு கோரிக்கைகளை முன் வைக்கிறது. ஒன்று, மருத்துவர் ராமதாஸ் மீது தொடரப்பட்ட வழக்குகளில் அவருக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர்மன்றம் பிணைய விடுதலை அளித்த பிறகும் அவரை விடுதலை செய்யாமல், 2004ம் ஆண்டு தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் புதிதாக வழக்கு தொடர்ந்து அவரை சிறையில் வைத்திருப்பதை நாம் தமிழர் கட்சி கண்டிக்கிறது. இது சட்டத்தையும், நீதியையும் அரசியல் காரணங்களுக்காக தவறாக பயன்படுத்தும் தேவையற்ற நடவடிக்கையாகும்.

மேலும், ராமதாஸ் அவர்களின் வயது, அவருக்குள்ள உடல் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவரையும், அக்கட்சியின் தலைவர்களையும், தொண்டர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இரண்டாவதாக, அரசு தொடுத்த வழக்கிற்காக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க நீதிமன்றத்தைத் தான் நாட வேண்டுமே தவிர, வன்முறையில் ஈடுபடுவதும், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், அவர்கள் காயமடைகிற அளவிற்கு கண்மூடித்தனமான வன்முறையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஈடுபடுவதும் நாகரீகமான அரசியல் அல்ல.

கடந்த ஒரு வார காலமாக சாலை வழிப்பயணம் என்பது பல ஊர்களிலும் நிறுத்தப்பட்டு, பொது மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாமக தலைவர்கள் உடனடியாக தங்கள் தொண்டர்களை வன்முறை பாதையில் செல்லாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சி விடுக்கும் வேண்டுகோளாகும்.

2008ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டு அரசியலிலும், பொது வாழ்விலும் ஒரு இணக்கமான சமூக அமைதி நிலவியது. இலங்கையில் தமிழினம் இன அழித்தலுக்கு உள்ளாகி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவான, ஒருமித்த அரசியல் எண்ணவோட்டம் தமிழ்நாடு மக்களிடையே நிலவியது. அந்த நிலை இன்று தகர்க்கப்பட்டுள்ளது. இது தமிழினத்தின் அரசியல் உரிமை போராட்டங்களுக்கு ஒரு பெரும் பின்னடைவாகும்.

தமிழர் சமூகத்தில் புறையோடிப்போயுள்ள சாதிய உணர்வுகளால் ஆங்காங்கு நடைபெறும் சில நிகழ்வுகளுக்காக, உழைக்கும் இரு பெரும் சமூகங்களுக்கு இடையே ஒரு மோதல் அரசியலை முன்னெடுப்பதை நாம் தமிழர் கட்சி முழுமையாக எதிர்க்கிறது.

தமிழினப் போராளியாக நின்று, தமிழினத்தின் உரிமைப் போராட்டங்களில் முன்னணியில் நின்ற மருத்துவர் ராமதாஸ் அவர்கள், ஒரு வன்னியரை முதல்வராக்குவோம் என்ற முழக்கத்துடன் முன்னெடுக்கும் அரசியல் தமிழினத்தை 500 ஆண்டு காலத்திற்கு பின்னால் தள்ளும் பிற்போக்குத்தனமான அரசியலாகும்.

இப்படிப்பட்ட சாதிய அரசியல், தமிழின உணர்வு எனும் ஓர்மையின் மாபெரும் பலத்தை உடைத்து, தமிழ்த் தேசிய அரசியலை பலவீனப்படுத்தும். அது வன்னிய சமூகத்திற்கும் பயனளிக்காது, தமிழினத்திற்கும் பயன்படாது. மதிப்பிற்குரிய ராமதாஸ் அவர்கள் முன்னெடுக்கும் இந்த அரசியலை நாம் தமிழர் கட்சி முழுமையாக எதிர்க்கிறது.

தமிழினத்திற்கு எதிரான இன அழித்தலில் இருந்து காவிரி, முல்லைப் பெரியாற்று அணைப் பிரச்சனைகள் வரை, இன்றைக்கு நாம் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளிலும் சாதி, மத வேறுபாட்டு உணர்வுகளைத் தாண்டி தமிழினமாய் ஒன்றுபட்டு நின்றால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும்.

தமிழ்த் தேசிய உணர்வே நமது நிகழ்கால, எதிர்கால நல்வாழ்விற்கான ஒரே ஒரு சரியான அரசியல் பாதையாகும். இதனை தமிழர் சமூதாயத்தின் அங்கமாக உள்ள அனைத்து அரசியல் சக்திகளும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+