என் மனைவியையா கடிக்கிறாய் - நாய் மீது பாய்ந்து கடித்துக் குதறிய அமெரிக்கர்
சிகாகோ: மனிதனை நாய் கடித்தால் செய்தி இல்லை, மனிதன் நாயைக் கடித்தால்தான் செய்தி என்பார்கள். அதன்படி, அமெரிக்காவில் ஒரு நபர் நாயைக் கடித்து செய்தியாகியுள்ளார்.
தனது மனைவியைக் கடிக்கப் பாய்ந்த நாயைத் தடுக்க வேறு வழியில்லாமல் அந்த நாயைக் கடித்துள்ளார் அந்த நபர்.
அயோவாவைச் சேர்ந்தவர் கேரன் ஹென்றி. இவர் தனது நாய் கேண்டியுடன் தனது மாமனார் வீட்டுக்கு அருகே வாக்கிங் போய்க் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்தத் தெருவில் இருந்த ஒரு பெரிய நாய், வெறியுடன் கேரனை நோக்கிப் பாய்ந்தது. அவரை கீழே தள்ளி வெறியுடன் கடிக்க முயன்றது. கேரனின் நாய் மீதும் பாய்ந்து கடித்தது.
இதைப் பார்த்த கேரனின் கணவர் லேயன் வேகமாக ஓடி வந்தார். தனது மனைவியைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் நாய் விடவில்லை. இதனால் படு ஆவேசமாக அந்த நாய் மீது பாய்ந்தார். நாயை வெறி கொண்டு கடுமையாக கடித்தார். இதையடுத்து நாய் அலறியபடி கேரனை விட்டு தப்பி ஓடியது.
பின்னர் உடனடியாக தனது மனைவியையும், நாயையும் அங்கிருந்து மீட்டுமருத்துவமனைக்குக் கொண்டு சென்றார் லேயன். இந்த சண்டையில் லேயனுக்கும் நாய்க்கடி பட்டு விட்டது. அனைவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.