வட மாநிலத்தவர்களை விட தென் மாநிலத்தவர்களின் வருமானம் அதிகம்
பெங்களூர்: வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது என்பார்கள். ஆனால் வட மாநிலங்களை விட தெற்கு மாநிலங்கள்தான் சிறப்பாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சிறந்த அரசாங்கம், கல்வி மற்றும் திறமையான ஆட்சி ஆகியவற்றில் தென் மாநிலங்கள் வட மாநிலங்களை விட முன்னேறியுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.
இந்தியாவின் வடக்கு மற்றும் தென் மாநிலங்களில் வசிப்போர்களின் தனிநபர் வருமானம், வறுமைக்கோடு உள்ளிட்ட முக்கிய விஷயங்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஆய்வறிக்கையில் பல சுவாரஸ்ய தகவல்கள் தெரியவந்துள்ளன மேற்கொண்டு படியுங்களேன்.

தனிநபர் வருமானம்
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவை உள்ளடக்கிய தென் மாநிலங்களில் கடந்த 2009-10ம் ஆண்டில் தனிநபர் வருமானம் ரூ. 19 ஆயிரத்து 531 ஆகும்.
இதுவே வடமாநிலங்களில் (பீகார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உ.பி., உத்தர்கண்ட், ஜார்க்கண்ட் மற்றும் சட்டீஸ்கர்) ரூ. 8951 ஆகும்.

வடக்கில் வறுமை அதிகம்
இதே போல், 2009-10ல் வறுமையில் வாடுபவர்கள் தென்மாநிலங்களில் 19 சதவீதமாகவும், வடமாநிலங்களில் 38 சதவீதமாகவும் உள்ளது. எனவேதான் வடக்கில் இருந்து தெற்கே வேலை தேடி பெரும்பாலோனோர் படையெடுக்கின்றனர்.

50 ஆண்டுகளுக்கு முன்பு
கடந்த 1960ம் ஆண்டு தென் மாநிலங்களில் வறுமையின் அளவு 66 சதவீதமாக இருந்த நிலையில், வடமாநிலங்களில் இது 55 சதவீதமாக இருந்தது. அப்போது தென் மாநிலங்களில் இருந்து அதிகமானோர் வேலை தேடி வடமாநிலங்களுக்கு சென்றனர். இப்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

இஞ்சினியரிங் கல்லூரிகள்
நாட்டிலுள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகள் தென் மாநிலங்களில் தான் உள்ளது. தொழில்நுட்ப கல்வி, மின்சார உற்பத்தி மற்றும் நகரமயமாக்கல் போன்றவை இவ்வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக விளங்கி வருகின்றன.

திறமையான ஆட்சி
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவை உள்ளடக்கிய தென் மாநிலங்களில் நிலவும் நிலையான அரசாங்கம் மற்றும் திறமையான ஆட்சி காரணமாக, தனிநபர் வருமானம் அதிகரித்து. அதன் காரணமாக வறுமை பெருமளவு குறைந்துள்ளது.

வளரும் தெற்கு
இவை தவிர, தற்போது தென் மாநிலங்களில் நிலவும் சிறப்பான சட்டம் ஒழுங்கு, திறமையான நிர்வாகம் மற்றும் நிலையான அரசாங்கம் காரணமாக தென் மாநிலங்களில் வளர்ச்சி அதிகரித்துள்ளது. தென் மாநிலங்களில் நடந்த தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்ச்சி காரணமாகவே இந்த வளர்ச்சி ஏற்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.

போராட்டமும் விழிப்புணர்வும்
சென்னை மாகாணமாக இருந்த தென் மாநிலங்களில் நடந்த போராட்டங்கள் காரணமாக, தாழ்த்தப்பட்டோர்கள் கல்வி கற்கவும், அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றது. இதனை அப்போது அமைந்த அரசுகளும் ஆதரித்ததால் மக்களிடையே கல்வி அதிகரிப்பு, விழிப்புணர்வு, வேலைவாய்ப்பு அதிகரித்தது. இதுவே வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

வடக்கில் போராட்டம் இல்லை
வடமாநிலங்களில் இது போன்ற போராட்டங்கள் நடக்காத காரணத்தால் மக்கள் எழுச்சியும், விழிப்புணர்வும் ஏற்படவில்லை என அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஆய்வினை கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனமான பப்ளிக் அபயர்ஸ் சென்டர் (பிஏசி) என்ற நிறுவனம் மேற்கொண்டது.












Click it and Unblock the Notifications