பால், பழம், ஐஸ்கிரீமோடு... 30 நாய்களின் உடம்பையும் பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த டென்மார்க் தாத்தா

டென்மார்க்கின் வடக்கு பகுதியில் டோயரிங் நகரில் ஒரு வீட்டில் இருந்து நாய்கள் குரைக்கும் சத்தம் அடிக்கடி கேட்டு வந்ததால், இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், அந்த வீட்டில் தனியே வசித்து வரும் 66 வயது முதியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அக்கம்பக்கத்தினரின் அமைதியை கெடுக்கும் வகையில் இடையூறு செய்யும் வண்ணம் நடந்துகொண்டதற்காக அவருக்கு கோர்ட்டில் கடந்த மாதம் அபராதம் விதிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து நாய்கள் வளர்க்கவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அபராதம் செலுத்த அவர் மறுத்து வந்தார்.
இந்நிலையில் மீண்டும் , அவரது வீட்டில் இருந்து மீண்டும் நாய் குரைக்கும் சத்தம் கேட்பதாக அக்கம்பக்கத்தினர் 2 நாள் முன்பு போலீசில் புகார் தெரிவித்தனர் . இதுபற்றி விசாரிப்பதற்காக போலீசார் நேற்று முன்தினம் சென்ற போது வீடு பூட்டியிருந்துள்ளது. இதையடுத்து, பிரத்யேக வாரன்ட் பெற்ற போலீசார், பூட்டை உடைத்து சென்று சோதனை நடத்தினர்.
அங்கிருந்த 4 நாய்கள், ஒரு பாம்பை மீட்ட போலீசார் வீட்டில் வேறு எங்காவது விலங்குகளை முதியவர் அடைத்து வைத்திருக்கலாம் என்று சந்தேகத்தோடு வீடு முழுக்க தீவிர சோதனை நடத்தினர். அப்போது, குளிர்சாதன பெட்டியின் ப்ரீசரை திறந்து பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், அதில் நாய்களின் உடல்கள் திணிக்கப்பட்டிருந்தன.
25 நாய்க் குட்டிகள் உள்பட 30 நாய்களின் உடல்களை ப்ரீசரில் இருந்து போலீசார் மீட்டனர். நாய்கள் எப்படி இறந்தது என்பது தெரியவில்லை. செல்ல பிராணிகளை பிரிய மனமில்லாததால் ப்ரீசரில் வைத்தாரா, அவரே அடித்து கொன்றாரா, அவர் சைக்கோவா என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி முதியவரை தேடி வருகின்றனர். .












Click it and Unblock the Notifications