வரலாறு பாடம்- பந்தல் தொழிலாளி மகள் மாநிலத்தில் முதலிடம்
சாத்தான்குளம்: பிளஸ் டூ பொது தேர்வில் சாத்தான்குளத்தை சேர்ந்த பந்தல் தொழிலாளி மகள் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அமுத்துண்ணகுடி கிராமத்தை சேர்ந்த பந்தல் போடும் தொழிலாளி செல்வன். இவரது மனைவி அந்தோணியம்மாள். இவர்களது மகள் ஆனிமஞ்சு. இவர் சாத்தான்குளம் செயிண்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்டூ கணக்கியல் பிரிவில் படித்தார்.
இவர் நடந்து முடிந்த பிளஸ்டூ தேர்வில் வரலாறு பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். பாட வாரியாக இவர் பெற்றுள்ள மதிப்பெண் வருமாறு, தமிழ்-184, ஆங்கிலம்-151, பொருளியியல்-194 விலங்கியல்-196, கணக்கு பதிவியல்-200, வரலாறு-200 என மொத்தம் 1125 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இதுகுறித்து மாணவி ஆனிமஞ்சு கூறுகையில், பிளஸ்டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அதிகாலை 4 மணிக்கு எழுந்து படித்தேன். பெற்றோர், ஆசிரியர் எனக்கு ஊக்கமளித்தனர். இதன் காரணமாக நான் வரலாறு பாடத்தில் முதல் இடத்தை பிடிக்க முடிந்தது. இதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர், வரலாறு ஆசிரியர் ஆகியோருக்கு நன்றி என்றார்.











Click it and Unblock the Notifications