16 - 18 - 16.. இளங்குற்றவாளிகள் வயது வரம்பை 16 ஆக குறைக்க நாடாளுமன்றக் குழு சிபாரிசு

பாலியல் கொடுங்குற்றங்களில் ஈடுபடுகிறவர்கள் 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்றால், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க முடியாது. இளங்குற்றவாளிகள் என்ற பிரிவில், அவர்களுக்கு குறைந்த தண்டனைதான் வழங்க முடியும். இதனால், இளங்குற்றவாளிகளுக்கான வயது வரம்பை தற்போது உள்ள 18-ல் இருந்து 16 ஆக குறைக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்துள்ளது.
பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் அமைச்சக பாராளுமன்ற குழு, இந்த பிரச்சினை குறித்து ஆய்வு செய்த, பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளங்குற்றவாளிகளுக்கான வயது வரம்பை 18 வயதில் இருந்து 16 வயதாக குறைக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
கடந்த 2010-ம் ஆண்டில், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கக்கூடிய 22,740 குற்றங்களை இளங்குற்றவாளிகள் செய்துள்ளனர். அடுத்த ஆண்டில் இது 10.5 சதவீதம் அதிகரித்து குற்றங்களின் எண்ணிக்கை 25,125 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் பெண்களுக்கு எதிராக இளங்குற்றவாளிகள் புரிந்த குற்றங்களும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன.
2010-ல் 858 பேர் கற்பழித்தல், 391 பேர் பெண்களை கடத்தல், 536 பேர் மானபங்க வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருந்தனர். இந்த குற்றங்களின் எண்ணிக்கை, அடுத்த ஆண்டில் (2011) முறையே 1,149, 600, 573 ஆக அதிகரித்தது. அதிலும் குறிப்பாக 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களே இந்த குற்றங்களில் அதிக அளவில் ஈடுபட்டு இருப்பதும் பதிவாகி இருக்கிறது.
கடந்த 1986-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி, இளங்குற்றவாளிகளுக்கான வயது வரம்பு ஆண்களுக்கு 16 என்றும், பெண்களுக்கு 18 வயது என்றும்தான் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 2000-வது ஆண்டில் கொண்டு வரப்பட்ட திருத்த சட்டத்தில்தான், ஆண்களுக்கான வயது வரம்பும் 18 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இளம் வயதினர் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதற்கு, உணர்வு கோளாறு, சிதைந்த குடும்ப சூழ்நிலை, வம்புச்சண்டைக்கு இழுக்கும் மனப்பாங்கு, ஊதாரித்தனமான வாழ்க்கைச்சூழல், பெற்றோர்கள் வழங்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் போன்றவைகளே காரணமாகும். எனவே இந்த குற்றங்களை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை தேவை என எச்சரிக்க விரும்புகிறோம்.
அதுவும் குறிப்பாக, டெல்லியில் சமீபத்தில் நடந்த மருத்துவ மாணவி கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து, இந்த பிரச்சினையில் தடுப்பு நடவடிக்கை குறித்து, சட்டம்-ஒழுங்கை அமல்படுத்தும் துறையினர் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் பங்கேற்கும் நாடு தழுவிய உடனடி விவாதம் அவசிய தேவையாகும்.
என இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications